3804.

     செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள்
          திருமேனி காட்டிஎனைத் தெளிவித்தாய் நீயே
     பொய்வகைஅன் றிதுநினது புத்திஅறிந் ததுவே
          பொன்அடியே துணைஎனநான் என்உயிர்வைத் திருந்தேன்
     எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே
          எந்தைவர வெதிர்பார்த்தே இன்னும்இருக் கின்றேன்
     ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
          அருட்சோதிப் பெரும்பொருளை அளித்தருள்இப் பொழுதே.

உரை:

     எந்தையே, ஒருநாள் துன்பத்தால் தாக்குண்டு அறிவு மருண்டு நின்றோனாக நீ குருபரனாய்த் திருமேனி விளங்க உன்னைக் காட்டி மருள வேண்டா என்று எனக்குத் தகுவன கூறித் தெளிவித்தருளினாய்; இது பொய்யுரை யன்று; உன்னுடைய திருவுள்ளம் நன்கறிந்ததாகும்; உன்னுடைய அழகிய திருவடிகள் இரண்டுமே எனக்குத் துணையாம் என்று எண்ணி நான் என்னுடைய உயிரைத் தாங்கி யிருந்தேன்; இனித் தளருவது ஏன்? நம் பெருமானாகிய பரமன் அருள் செய்யா தொழியான் என்றெண்ணி உன்னுடைய அருள் வரவை எதிர்பார்த்துக் கொண்டு இன்னும் இருக்கின்றேன்; ஆயினும், கண் காது முதலிய ஐவகைக் கருவிகளால் என் உயிர்க்கு எய்தும் துன்பங்களை இனிப் பொறுத்தாற்ற மாட்டேனாகின்றேன்; ஆகவே இப்பொழுதே திருவருள் ஞான ஒளியாகிய பெரிய பொருளை எனக்கு அளித்தருள்வாயாக. எ.று.

     இதன்கண் துன்ப மிகுதியால் அறிவு திகைத்து செய்வகை அறியாமல் மயங்கியபோது சிவபரம்பொருள் குருமுதல்வனாய்த் திருவுருக் கொண்டு தம்பால் எழுந்தருளி மன மயக்கம் தீர்த்துத் தெளிவு பெறுவித்த அருட்செயலை நினைப்பிப்பாராய், “செய்வகை என்னெனத் திகைத்தேன் திகையேல் என்று ஒருநாள் திருமேனி காட்டி எனைத் தெளிவித்தாய் நீயே” என்று உரைக்கின்றார். தாம் கூறுவது பொய்யுரை யன்று; இறைவன் திருவுள்ளம் அறிந்த நிகழ்ச்சி என்றற்கு, “பொய்வகையன்று இது நினது புந்தி அறிந்ததுவே” என்று புகல்கின்றார். நினது அருளுரையால் அன்று தெளிவுபெற்ற நான் துன்பங்கள் எத்தனை வந்து தாக்கினும் நின் திருவடியே துணையென்ற உள்ளத்தோடு உயிர் தாங்கி இருப்பேனாயினேன் எனத் தமது மனநிலையை எடுத்துக் காட்டுதற்கு, “பொன்னடியே துணை என நான் என் உயிர் வைத்திருந்தேன்” என்று உரைக்கின்றார். துன்பங்களால் மனச்சோர்வு எய்திய பொழுதும் சோர்வது எற்றுக்கு? நம் பெருமானாகிய பரம்பொருள் முன்போல் நம்பால் வந்தருளித் தன் திருவருள் ஞானத்தை வழங்கி அருளுவான் என்ற எண்ணத்தால் உன்னுடைய திருவரவை எதிர்பார்த்துக் கொண்டு இப்பொழுதும் இருந்து வருகின்றேன் என இயம்புவாராய், “எய்வகை என் நம்பெருமான் அருள் புரிவான் என்றே எந்தை வரவு எதிர்பார்த்தே இன்னும் இருக்கின்றேன்” என்று எடுத்துரைக்கின்றார். எனினும் துன்பங்கள் வந்து தாக்கியவாறு இருத்தலின் என்னால் பொறுத்தாற்ற முடியவில்லை; உனது அருள் ஞானமாகிய பெரும்பொருளை நீ இப்பொழுது நல்குவாயாயின் யான் உய்தி பெறுவேன் என்பாராய், “ஐவகை இவ்வுயிர்த் துயரம் இனிப் பொறுக்க மாட்டேன் அருட் சோதிப் பெரும் பொருளை அளித்தருள் இப்பொழுதே” என்று விளம்புகின்றார். ஐவகைத் துயரம் என்றது, கண் காது முதலிய ஐம்பொறிகளாலும் உண்டாகும் துன்பங்கள். அவிச்சை, ஆங்காரம், அவா, ஆசை, கோபம் என ஆன்மாவை வருத்தும் ஐவகைத் துன்பங்கள் எனினும் பொருத்தம்.

     இதனால், ஐவகைத் துயரங்களையும் பொறுத்தற்கு இன்றியமையாத அருட் சோதிப் பெரும்பொருளை நல்கி யருளுமாறு வேண்டியவாறாம்.

     (5)