4280.

     ஆறாறுக் கப்புற மாகும் பொதுவில்
          அதுவது வாநடம் நான்காணல் வேண்டும்
     ஏறாமல் இழியாமல் இருப்பாயோ தோழி
          ஏறி இழிந்திங் கிறப்பாயோ தோழி.

உரை:

     ஆறாறு - தத்துவம் முப்பத்தாறு. தத்துவாதீதப் பெருவெளி பொது எனக் குறிக்கப்படுகின்றது. காணப்படுவதும் காண்பதுமென இரண்டாதலின்றிக் காட்சிமயமாய் இயைவது விளங்க, “அதுவதுவாம் நடம்” எனத் தலைவி கூறுகின்றாள். காட்சியின்கண் அசைவின்றி ஒன்றியமைதல் வேண்டும் என்பாளாய்த் தோழியை, “ஏறி இழிந்திங்கு இறப்பாயோ தோழி” எனத் தலைவி உரைக்கின்றாள்.

     (5)