4334. ஆறந்தத் துள்ளும் அமர்ந்தபொற் பாதம்
ஆதி அனாதியும் ஆகிய பாதம்
மாறந்தம் இல்லாஎன் வாழ்முதற் பாதம்
மண்முதல் ஐந்தாய் வழங்கிய பாதம். ஆடிய
உரை: ஆறந்தம் - வேதாந்தம். சித்தாந்தம், கலாந்தம், யோகாந்தம், நாதாந்தம், போதாந்தம் என வரும் ஆறு அந்தங்கள். ஆதி - தோற்றமுடையது; அனாதி - அஃது இல்லாதது. மாறு அந்தம் இல்லா வாழ்முதல் - மாறாய் அழிவதில்லாத வாழ்க்கைக்கு முதற் பொருளாவது. மண் முதல் ஐந்து - நிலம் நீர் தீ காற்று வானம் என்ற ஐம்பெரும் பூதம். வழங்கிய பாதம் - படைத்தருளிய திருவடி. (14)
|