4471. இயற்கைஉண்மை வடிவினரே அணையவா ரீர்
எல்லாம்செய் வல்லவரே அணையவா ரீர்
இயற்கைவிளக் கத்தவரே அணையவா ரீர்
எல்லார்க்கும் நல்லவரே அணையவா ரீர்
இயற்கைஇன்ப மானவரே அணையவா ரீர்
இறைமையெலாம் உடையவரே அணையவா ரீர்
இயற்கைநிறை வானவரே அணையவா ரீர்
என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்
உரை: இயற்கை யுண்மை வடிவினர், செயற்கை வகையாற் சிறப்புறும் உண்மையினும் இயல்பாகவே அமையும் உண்மை மிக வுயர்ந்ததாதலால் இறைவனை இயற்கை யுண்மை வடிவினர் எனப் புகழ்கின்றாள். உண்மை வடிவு - உண்மையின் சொரூபம். இயல்பாகவே தூய ஞானவொளி விளங்குபவராதலால், “இயற்கை விளக்கத்தவர்” என்று போற்றுகின்றாள். செயற்கைக்கு நிலைபேறு கிடையாது என அறிக. இறைமை - பரமாந் தன்மை, நிறைவு - யாதாலும் குறைவின்மை. (1)
|