4479.

     கருணைநடஞ் செய்பவரே அணையவா ரீர்
          கண்மணியில் கலந்தவரே அணையவா ரீர்
     அருள்நிறைசிற் சபையவரே அணையவா ரீர்
          அன்பர்குறை தீர்த்தவரே அணையவா ரீர்
     தருணமிது விரைந்தென்னை அணையவா ரீர்
          சத்தியரே நித்தியரே அணையவா ரீர்
     இருள்நிறைந்தார்க் கறிவரியீர் அணையவா ரீர்
          என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்

உரை:

     கருணை நடம் - அருள் நடனம். அருள் நிறை சிற்சபை. திருவருள் ஞானிகள் நிறைந்த ஞான சபை. சத்தியர் - மெய்ம்மை வடிவினர். நித்தியர் - என்றும் இருப்பவர். இருள் நிறைந்தார் - அஞ்ஞான இருள் நிறைந்த கீழ்மக்கள்.

     (9)