77. ஆனந்தப் பரிவு
தாழிசை
அஃதாவது, ஞானத்தால் விளைந்த இன்ப மிகுதியால், உள்ளம் குழைந்து உரையாடுதல். 4507. நானந்த மடையாதெந் நாளினும்உள்
ளவனாகி நடிக்கும் வண்ணம்
ஆனந்த நடம்புரிவான் ஆனந்த
அமுதளித்தான் அந்தோ அந்தோ.
உரை: அந்தம் - அழிந்தொழிதல்; சாகா நிலை. எந்நாளினும் உள்ளவன் - எக்காலத்தும் சாவாதிருக்கும் உள்பொருளாதல். ஆனந்த அமுது - சிவஞானமாகிய நல்லமிர்தம். உயிர்கள் சாவா மூவாப் பெருநிலையெய்தும் குறிப்பொடு சிவனது திருநடம் நிகழ்வதெனச் சான்றோர் கூறுதலால், “எந்நாளினும் உள்ளவனாகி நடிக்கும் வண்ணம் ஆனந்த நடம் புரிவான்” என அறிவிக்கின்றார். அந்தோ - குறிப்பு மொழி. (1)
|