4959. துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச்
சூழலில் உண்டது சொல்லள வன்றே
எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன்
இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
வேதுசெய் மரணத்துக் கேதுசெய்வோ மென்றே
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
உரை: துஞ்சாத நிலை - கெடாத நிலை. சுத்த சன்மார்க்கச் சூழல் - சுத்த சன்மார்க்க ஞானத்தை நல்கும் சங்கம். எஞ்சாத அருள் - குறையாத திருவருள். விஞ்சாத அறிவு - மிகை படுதல் இல்லாத உலகியல் அறிவு. வேது செய் மரணம் - மறப்பிக்கும் மரணம். “பிறந்தால் பிஞ்ஞகன் பேர் மறப்பன் கொலோ என்று உள்ளம் மருகிடுமே” என்று திருநாவுக்கரசர் நவில்வது காண்க. (9)
|