124. முரசறைதல்

தாழிசை

    அஃதாவது, திருக்கோயில்களில் விழாத் தொடக்கத்தின் முன் முரசறைவது மரபாதலால் அந்த மரபு பற்றி “முரசு அறைதலைப்” பேசுகின்றார்.

5295.

     அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு
          அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு
     மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு
          மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.

உரை:

     அருட் பெருஞ் சோதியாக மாறினேன் என்று முரசு அறைபவனே அதனை அறைவாயாக; அருளாட்சி பெற்றேன் என்றும் நீ முரசு அறைவாயாக; உலகியல் மருள் நெறிச் சார்பு என்னை விட்டு நீங்கி விட்டது என்று முரசு அறைவாயாக; வீண் மரணம் எய்துவதைக் கைவிட்டேன் என்று முரசு அறைந்து தெரிவிப்பாயாக.

     (1)