5421. பேரிடர் தவிர்த்துப் பேரருள் புரிந்த
பெருமநின் தன்னைஎன் றனக்கே
சாருறு தாயே என்றுரைப் பேனோ
தந்தையே என்றுரைப் பேனோ
சீருறு குருவே என்றுரைப் பேனோ
தெய்வமே என்றுரைப் பேனோ
யாரென உரைப்பேன் என்னெனப் புகழ்வேன்
யாதுமொன் றறிந்திலேன் அந்தோ.
உரை: பெரிய துன்பத்தை நீக்கி மிக்க திருவருள் புரிந்த பெருமானே! உன்னை எனக்குரிய தாயென்று சொல்லுவேனோ? தந்தையென்று சொல்லுவேனோ? சிறப்புடைய ஞானகுரு என்றும் தெய்வம் என்றும் சொல்லுவேனோ? உன்னைய யார் என்று உரைப்பேன்; என்ன சொல்லிப் புகழ்வேன்; யாதொன்றும் அறிகிலேன்; எ.று.
பேரிடர் - பெருந் துன்பம். தன்னைப் பெற்ற அன்புடைய தாய் என்றற்கு, “சாருறு தாய்” என்று குறிக்கின்றார். ஞானத்தால் சிறப்புடைய குருபரன் என்பது விளங்க, “சீருறு குரு” என்று செப்புகின்றார். (126)
|