5433.

     வள்ளலாம் கருணை மன்றிலே அமுத
          வாரியைக் கண்டனம் மனமே
     அள்ளலாம் எடுத்துக் கொள்ளலாம் பாடி
          ஆடலாம் அடிக்கடி வியந்தே
     உள்எலாம் நிரம்ப உண்ணலாம் உலகில்
          ஓங்கலாம் உதவலாம் உறலாம்
     கள்எலாம் உண்டவண்டென இன்பம்
          காணலாம் களிக்கலாம் இனியே.

உரை:

     வளவியதாகிய கருணை உருவான அம்பலத்திலே எழுந்தருளும் அமுதக் கடலாகிய சிவத்தை நாம் கண்டு கொண்டோம்; மனமே, இனி அதனை எடுத்து அள்ளிக் கொள்ளலாம்; அதன் புகழைப் பாடி ஆடலாம்; அதனை அடிக்கடி வியந்து உள்ளமெல்லாம் நிறைய உண்ணலாம்; பிறர்க்கும் உதவலாம்; அதனால் உலகில் உயர்ந்தோங்கலாம்; தேனையுண்ட வண்டுபோல இன்பமுறலாம்; பலகாலும் கண்டு களிக்கலாம். எ.று.

     வள்ளல் என்றது வண்மை குறித்து நின்றது. அம்பலத்திலே எழுந்தருளுகின்ற சிவபெருமானே “அமுத வாரி” என்று கூறுகின்றார். வாரி - கடல். உள்ளமெல்லாம் நிறைந்து குளிர உண்ணலாம் என்றற்கு, “உள்ளெலாம் நிரம்ப உண்ணலாம்” என இயம்புகின்றார். வண்டென இன்பமுறலாம் காணலாம் களிக்கலாம் என இயையும்.

     (138)