கட

கட்டளைக் கலிப்பா

5447.

     நாய்க்கும் ஓர்தவி சிட்டுப்பொன் மாமுடி
          நன்று சூட்டினை என்றுநின் அன்பர்கள்
     வாய்க்கு வந்த படிபல பேசவே
          மதியி லேனையும் மன்னருட் சத்தியாம்
     தாய்க்குக் காட்டிநல் தண்ணமு தூட்டிஓர்
          தவள மாடப்பொன் மண்டபத் தேற்றியே
     சேய்க்கு நேரஎன் கையில்பொற் கங்கணம்
          திகழக் கட்டினை என்னை நின் செய்கையே.

உரை:

     இழிந்த நாய்க்கும் ஒரு ஆசனமிட்டு அதற்குப் பெரிய பொன் முடியைப் பெரிதும் அணிந்தாய் என்று நின்னுடைய அன்பர்கள் தங்கள் வாய்க்கு வந்தபடி பலவாறு பேசுமாறு அறிவில்லாத என்னையும் பெரிய அருட் சத்தியாகிய தாய்க்குக் காட்டி நல்ல குளிர்ந்த அமுதூட்டி ஒரு வெண்மையான மாடத்தில் பொன்னிற மண்டபத்தின்கண் என்னை அமரச் செய்து சிறு குழந்தையை ஒப்ப என் கையில் பொன்னாலாகிய கங்கணம் ஒன்றை ஒளி விளங்கக் கட்டி அருளினாய்; நின்னுடைய செய்கையை என்னென்பது. எ.று.

     நன்ஞானம் இல்லாதவன் எனத் தம்மை குறிப்பதற்கு, “மதியிலேன்” என்று கூறுகின்றார். வெண்ணிறமான மாளிகை என்பதற்குத் “தவள மாடம்” என்று உரைக்கின்றார். தவள மாடத்தின் உள்ளிருப்பது பொன்மண்டபம் என அறிக. சேய் - இளங்குழந்தை. நீ எனக்குச் செய்த இந்தச் சிறப்பை உன்னுடைய அன்பர்கள் பொருந்தாது எனக் கருதித் தூற்றுவர் என்பாராய், “நின் அன்பர்கள் வாய்க்கு வந்தபடி பல பேசுவர்” என்று கூறுகின்றார். அவர் கூறுவனவற்றுக்கு எடுத்துக்காட்டு உரைப்பார் போல, “நாய்க்கும் ஓர் தவிசு இட்டுப் பொன் மாமுடி நன்று சூட்டினை என்று நின் அன்பர்கள் பேசுவர்” என உரைக்கின்றார். இதனால், நீ எனக்குச் செய்த அருள் செய்கையை நின் அன்பர்கள் கண்டால் வாயில் வந்தபடி ஏசுவர் என மொழிகின்றாராம். இச்சிறப்பு நிகழ்ந்த இடமும் காலமும் காரணமும் விளங்கத் தெரியவில்லை.

     (152)