5481. ஒழித்தேன் அவலம் அச்சம்எலாம்
ஓடத் துறந்தேன் உறுகண்எலாம்
கழித்தேன் மரணக் களைப்பற்றேன்
களித்தேன் பிறவிக் கடல்கடந்தேன்
பழித்தேன் சிற்றம்பலம் என்னாப்
பாட்டை மறந்தேன் பரம்பரத்தே
விழித்தேன் கருத்தின் படிஎல்லாம்
விளையா டுதற்கு விரைந்தேனே.
உரை: அவலக் கவலைகளை நீங்கினேன்; அச்சங்கள் எல்லாம் நீங்குமாறு போக்கினேன்; துன்பங்கள் எல்லாவற்றையும் கழித்து விட்டு மரணத்தால் உண்டாகும் இளைப்பையும் போக்கினேன்; பிறவிக் கடலைக் கடந்து மகிழ்ந்தேன்; திருச்சிற்றம்பலத்தைப் பொருளாகக் கொள்ளாத பாட்டை விலக்கினேன்; மேலும் அவற்றை மறந்து பரம்பொருள் ஞானத்தை நோக்கினேன்; நின் திருவுள்ளக் கருத்தின்படியே எல்லாம் செய்தற்கு முற்பட்டேன். எ.று.
அவலம் - கவலையால் உண்டாகும் மெலிவு. உறுகண் - துன்பங்களால் உண்டாகும் இடையூறு. மரணக் களைப்பு - மரணத்தை நினைப்பதால் உண்டாகும் மேனி மெலிவு. திருச்சிற்றம்பலத்தைப் பொருளாகக் கொள்ளாத பாட்டுக்களை இகழ்வதோடு நெஞ்சில் இல்லாதபடி நடந்தேன் என்பாராய், “சிற்றம்பலம் என்னாப் பாட்டைப் பழித்தேன் மறந்தேன்” என்று கூறுகின்றார். பழித்தேன் என்பது முற்றெச்சம். பரம்பரம் - ஈண்டு மேலான ஞானத்தைக் குறித்து நின்றது. விளையாடுதல் - செய்தல். விரைதல் - முந்துறுதல். (5)
|