5661. தோன்றியஐங் கருவினிலே சொல்லரும்ஓர் இயற்கைத்
துலங்கும்அதில் பலகோடிக் குலங்கொள்குருத் துவிகள்
ஆன்றுவிளங் கிடும்அவற்றின் அசலைபல கோடி
அமைந்திடும்மற் றவைகளுளே அமலைகள்ஓர் அனந்தம்
ஏன்றுநிறைந் திடும்அவற்றிற் கணிப்பதனுக் கரிதாய்
இலங்குபிர காசிகள்தாம் இருந்தனமற் றிவற்றில்
ஊன்றியதா ரகசத்தி ஓங்குமதின் நடுவே
உற்றதிரு வடிப்பெருமை உரைப்பவரார் தோழி.
உரை: தோழி! பூதங்கட்கு மூலமாகிய ஐவகைக் கருவில் சொல்லுதற்கரிய இயல்புகள் பல விளங்குகின்றன; அவற்றில் பல கோடிக் கணக்கில் உயர்ந்த குருத்துவிகள் அமைந்துள்ளன; அவற்றுள் அசலைகள் பலவும் அவற்றுள் அமலைகள் பலவும் அமைந்து நிறைந்திருக்கின்றன; அவற்றின்கண் எண்ணி அறிதற்கு அரியவாய் பிரகாசிகள் பல உள்ளன; அவற்றிற்கு ஆதாரமாக உள்ள தாரக சத்தி உயர்ந்தோங்குகிறது; அதன் நடுவில் சிறந்து விளங்குவது சிவத்தின் திருவடியாகும்; அதன் பெருமையை யாவரால் சொல்ல முடியும். எ.று.
குருத்துவி - கனம் பொருந்திய சத்திகள். அசலை - இயக்கமில்லாச் சத்திகள். அமலைகள் - மலக் கலப்பில்லாத சத்திகள். பிரகாசிகள் - ஒளி செய்யும் சத்திகள். தாரக சத்தி - ஆதார சத்தி. அதன் நடுவில் தான் சிவத்தின் திருவடி விளங்குகின்றது; இவைகள் வள்ளற் பெருமானின் யோகாந்த ஞானானுபவங்கள் என்றறிதல் வேண்டும். (37)
|