"மிக்கவுப . . . அறிந்தேன்" - மிகுந்த துணையாகப் பேசாதிருக்கும் பெரியவரும் விளக்கி ஓதியருளியவையும் இவையே! எந்நாளும் நிலையான நல்ல குருவாக நண்ணியவர்களும் தொகுத்துரைத்தருளிய வழிவகைகளும் இவைகளேயல்லாமல் வேறில்லையென்று அடியேன் நன்றாக அறிந்துள்ளேன்;
"அறிந்தபடி . . . புகலாய்" - அடியேன் அங்ஙனம் அறிந்தபடி நிலை நின்றொழுகி இன்பநலம் எளியேன் எய்தாவண்ணம் (அதன் மறுதலையாகிய துன்பத்துடன்) இந்நிலையை எய்தினேன். (அமைந்திருந்து எண்ணிப்பார்க்கு மிடத்து) அதுவும் நின் திருவருளென்னவே (மெய்ந்நூற்கல்வியினை எய்யா விழைவுடன்) கல்லாத அறிவில் வறிஞனாகிய அடியேன் உணர்வினுள்ளே உணர்த்தியருளினை; திருவடிப்பேற்றினுக்கு வழிவகை யாது என்று புகன்றருள்வாயாக.
"கருதரிய . . . கடவுளே" -
(வி - ம்) அடிமை - அறிவுடைய உயிர்கள். உடைமை - அறிவில்லாத உலகியற்பொருள்கள். வியாபி - எங்கும் நிறைந்த பொருள். இருக்கு - மந்திரம். வேதம் - மறை. உபகாரம் - துணை. வறிஞன் - நுண்ணுணர்வில்லா நொய்யன். கதி - திருவடிப்பேறு.
ஆருயிர்களின் அடிமையுண்மை வருமாறு :
| "சகமலா தடிமை யில்லை தானலாற் றுணையு மில்லை |
| நகமெலாந் தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி |
| முகமெலாங் கண்ணீர் மல்க முன்பணிந் தேத்துந் தொண்டர் |
| அகமலாற் கோயி லில்லை ஐயனை யாற னார்க்கே." |
| - 4. 40 - 8. |
| "கானார் புலித்தோ லுடைதலைஊண் காடுபதி |
| ஆனால் அவனுக்கிங் காட்படுவா ராரேடீ |
| ஆனாலுங் கேளாய் அயனும் திருமாலும் |
| வானாடர் கோவும் வழியடியார் சாழலோ." |
| - 8. திருச்சாழல், 12. |
ஆண்டவன் செயல் அனைத்துமென்னும் மெய்ம்மை வருமாறு :
| "ஆட்டுவித்தா லாரொருவ ராடா தாரே |
| அடங்குவித்தா லாரொருவர் அடங்கா தாரே |
| ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே |
| உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே |
| பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே |
| பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே |
| காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே |
| காண்பாரார் கண்ணுதலாய்க் காட்டாக் காலே." |
| - 6. 5 - 93. |