பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

195
     "அல்லது . . . குறையுமோ" - அன்றியும் செயல்புரி முதல்வராய் உலகினுக்கு ஐந்தொழில் புரியும் திருவாணைத் தேவர்கள் எம்மையாளும் தன்மையால் சிலர் இஃது அடாது என்று கூறுவரோ? அல்லது யாண்டும் நீக்கமற விரிந்துள்ள நின்னுடைய பெருமைமிக்க நிறைவினுக்குக் குறைவு ஏற்படுமோ?

     "பூதங்கள் . . . புகலாய்" - (அல்லது) பூதங்கள் அலகைபோல் வந்து பொருத்தமில்லாத சழக்குரை சாற்றிடுமோ? அல்லது அடியேனுக்குப் பரிபாககாலம் எனப்படும் செவ்வி தோன்றவில்லையோ? பழைமையாய் வருகின்ற அறிவில்லாத செறிந்த இருவினை எதிர்த்து வாயுரையாடுமோ? இவற்றுள் உண்மையான உள்ளார்ந்த உளவு என்ன என்பதை அடியேனுக்கு மொழிந்தருளுதல் வேண்டும்.

         "இகபரமிரண் . . . பொருளே" -

     (வி - ம்.) அல்லல் - துன்பம். அற - நீங்க. உலகம் - உயர்ந்தோர். விசித்திரம் - வியப்பு. ஓய்தல் - நின்றுவிடுதல். சங்கை - தடை. கிர்த்தியம் - செயல். கர்த்தர் - முதல்வர். அகிலம் - உலகம். அடாது - பொருந்தாது. பூரணம் - நிறைவு. விதண்டை - சழக்கு. பரிபாகம் - செவ்வி. சடம் - அறிவில்லது. உளவு - உள்ளுறை; செய்கை.

     ஒருமை மனமுடையார் நிலை வருமாறு :

"ஒடுங்கு நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
 நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
 இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
 படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே."
- 10. 1598.
     வினைசட மென்னும் உண்மை வருமாறு :

"வினையா மசத்து விளைவ துணரார்
 வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார்
 வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார்
 வினையாளர் மிக்க விளைவறி யாரே."
- 90. 2516.
(7)
 
நில்லாது தேகமெனும் நினைவுண்டு தேகநிலை
    நின்றிடவும் மௌனியாகி
  நேரே யுபாயமொன் றருளினை ஐயோஇதனை
    நின்றனுட் டிக்க என்றால்
கல்லாத மனமோ வொடுங்கியுப ரதிபெறக்
    காணவிலை யாகையாலே
  கையேற் றுணும்புசிப் பொவ்வாதெந் நாளும்உன்
    காட்சியிலிருந்து கொண்டு