பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

198
மரவுரி யுடுத்துமலை வனநெற் கொறித்துமுதிர்
    வனசருகு வாயில்வந்தால்
  வன்பசி தவிர்த்தும்அனல் வெயிலாதி மழையால்
    வருந்தியு மூலஅனலைச்
சிரமள வெழுப்பியும் நீரினிடை மூழ்கியுந்
    தேகநம தல்லவென்று
  சிற்சுக அபேக்ஷையாய் நின்னன்பர் யோகஞ்
    செலுத்தினார் யாம்பாவியேம்
விரவும்அறு சுவையினொடு வேண்டுவ புசித்தரையில்
    வேண்டுவ எலாமுடுத்து
  மேடைமா ளிகையாதி வீட்டினிடை வைகியே
    வேறொரு வருத்தமின்றி
இரவுபக லேழையர்கள் சையோக மாயினோம்
    எப்படிப் பிழைப்பதுரையாய்
  இகபர மிரண்டினிலும் உயிரினுக் குயிராகி
    எங்குநிறை கின்றபொருளே.
     (பொ - ள்) "மரவுரி . . . வருந்தியும்" - நெடுமரப்பட்டையுரித்து நார்மடியாக உடுத்தும், மலை நெல்லையும், காட்டு நெல்லையும் மனமகிழ்வாகக் கொறித்தும், உதிர்ந்துவிழுந் தன்மையாகிய காட்டுமரங்களின் சருகினைக் காற்றுக் கொண்டுவந்து தன் வாயில் புகுத்தினால் பசி தீரவுண்டும், தீ, வெயில் முதலியவற்றாலும், மழையினாலும் மிக வருந்தியும்1;

     "மூலவனலை . . . செலுத்தினார்" - மூலத்திடத்துள்ள அகத்தீயினை உச்சிவரை எழுப்பியும், புண்ணிய தீர்த்தங்களை நண்ணி, அஞ்செழுத்தோதி மூழ்கியும், இவ்வுடம்பு நம்முடன் என்றும் நிலையாக நிற்கும் நீர்மையுடையதன்றென்றும், அழியா அறிவுப் பேரின்பத்தின்கண் கொண்டுள்ள வேணவாப் பெருக்கால், உன் திருவடியன்பர் அகத்தவமாகிய அரச யோகத்தை விடாது நிகழ்த்தினர்;

     "யாம்பாவியேம் . . . உரையாய்" - நற்றவப்பேறில்லாக் கொடியவர்களாகிய யாங்கள் (அந்நெறிக்கு மாறாக) ஆறுசுவைகள் பொருந்திய நறுமண உண்டிகளை வேண்டும்போதினில் வேண்டியவாறெலாம் (ஈண்டிய விருந்துடன்) உண்டும்; பட்டுந்துகிலும் வேண்டியவாறு முட்டின்றி உடுத்தும், (கண்கவர் வனப்பினவாயுள்ள) மாடமாளிகை மேடை முதலியவற்றில் உவந்துறைந்தும், எவ்வகை இன்னலுமின்றி இரவு பகலாக இனிய வாழ்க்கைத் துணையாக இல்லறமகளிருடன்

 
 1. 
'புற்றுமாய்.' 8. செத்திலாப்பத்து - 2.