பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

355
உற்ற வேளைக் குறுதுணை யாயிந்தச்
சுற்ற மோநமைக் காக்குஞ்சொ லாய்நெஞ்சே
கற்றை வார்சடைக் கண்ணுதல் பாதமே
பற்ற தாயிற் பரசுகம் பற்றுமே.
     (பொ - ள்) நீக்கமுடியாத பேரிடர் வந்து பொருந்தியகாலத்து நமக்கு உறுதுணையாக இங்குள்ள சுற்றமோ நம்மைக் காக்கும்? நெஞ்சமே நாடிச் சொல்வாயாக. அடர்த்தியும் நீட்சியும் உடைய திருச்சடையினைக் கொண்டருளிய கண்ணுதற் கடவுளின் திருவடியே நீங்காப் பற்றாகும்; அதனைப் பற்றின் மேலான பேரின்பம் தானே வந்து நம்மைப் பற்றும்.

(77)
 
பற்ற லாம்பொரு ளேபரம் பற்றினால்
உற்ற மாதவர்க் குண்மையை நல்குமே
மற்றும் வேறுள மார்க்கமெ லாமெடுத்
தெற்று வாய்மன மேகதி எய்தவே.
     (பொ - ள்) இறவாத இன்ப அன்பினால் பற்றத்தகும் மேலாம் பொருனாகிய சிவபெருமானைப் பற்றினால் ஒருவர் மாதவராவர், அவர்க்கு அச் சிவன் தன் உண்மையாகிய திருவடியிணை நல்கியருள்வன். இவ்வுண்மையை விடுத்து வேறுள நெறிகளும் உண்டென மயங்காது அவற்றை நெஞ்சமே எடுத்தெறிவாயாக. அதுவே சிவனிலை எய்துவதற்கு வழியாகும்.

     இவ்வுண்மை வருமாறு :

"சாவிபோம் மற்றைச் சமயங்கள் புக்குநின்
 றாவி யறாதேயென் றுந்தீபற
 அவ்வுரை கேளாதே யுந்தீபற"
- திருவுந்தியார், 31.
(78)
 
 
எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
ஆரண மார்க்கத் தாகம வாசி
    அற்புத மாய்நடந் தருளுங்
காரண முணர்த்துங் கையும்நின் மெய்யுங்
    கண்கள்மூன் றுடையஎன் கண்ணே
பூரண அறிவிற் கண்டிலம் அதனாற்
    போற்றிஇப் புந்தியோ டிருந்து
தாரணி யுள்ள மட்டுமே வணங்கத்
    தமியனேன் வேண்டிடத் தகுமே.