பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

37

 அப்புறுத்த கடனஞ்சு முண்டான் தன்னை
    அமுதுண்டா ருலந்தாலு முலவா தானை
 அப்புறுத்த நீரகத்தே யழலா னானை
    ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே."
- 6. 26 - 2.
இவ்வுண்மை வரும் சிலப்பதிகாரத்தானு முணர்க :

"துண்ணென் றுடியொடு துஞ்சூ ரெறிதரு
 கண்ணி லெயின ரிடுகட னுண்குவாய்
 விண்ணோ ரமுதுண்டுஞ் சாவ வொருவரு
 முண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்."
- சிலப். 12, வேட்டுவவரி.
மேலும் செந்தமிழ்த் திருமாமறை முடிபும் வருமாறு காண்க:

"கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த
 ஆலால முண்டான் அவன்சதுர்தான் என்னேடீ
 ஆலால முண்டிலனேல் அன்றயன்மா லுள்ளிட்ட
 மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ."
- 8. திருச்சாழல் - 8.
     பொன்மலையை வில்லாக வளைத்துப் புரமூன்றுந் தன் நகையினால் எரியுண்ணச் செய்தனன் சிவன். மலையை வில்லாக வளைத்தலென்பது மலைவுதீராக் கற்போன்ற வல்லென்னு நெஞ்சினைத் தன்னருளால் ஒளி (வில்) யாகச் செய்தனன் என்பதாம். ஈண்டு ஒளி யென்பது திருவடியுணர்வாகிய மெய்யுணர்வு என்பதாம். மேலும் முப்புரம் என்பது மும்மல காரியம் என்ப.

முப்புரம் எரிப்பட்ட வுண்மை வருமாறுணர்க:

"வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
 உளைந்தன முப்புரம் உந்தீபற
 ஒருங்குடன் வெந்தவா றுந்தீபற."
- 8. திருவுந்தியார், 1.
"ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ
 ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
 பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
 கறைமிடற் றண்ணல் . . .
- புறநானூறு, 55.
எழுவகை மேகங்கள் வருமாறு :

     1. மணியைப் பொழியும் சம்வார்த்தம். 2. நீரைப்பொழியும் ஆவர்த்தம், 3. பொன்னைப் பொழியும் புட்கலாவர்த்தம், 4. பூவைப் பொழியும் சங்காரித்தம், 5. மண்ணைப்பொழியும் துரோணம், 6. கல்லைப்பொழியும் காளமுகி. 7. நெருப்பைப் பொழியும் நீலவர்ணம்.