பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

406
 
கலிநிலைத்துறை
எனக்கே னச்செயல் வேறிலை யாவுமிங் கொருநின்
தனக்கெ னத்தகும் உடல்பொரு ளாவியுந் தந்தேன்
மனத்த சத்துள அழுக்கெலாம் மாற்றியெம் பிரான்நீ
நினைத்த தெப்படி யப்படி அருளுதல் நீதம்.
    (ஒளியின் துணையின்றி விழியின் ஒளி பயன்படாமை போன்று) அடியேன் நின் திருவருளின் துணையின்றி எச்செயலும் செய்ய இயலாமையான் எல்லாம் இவ்விடத்து நின்னுடையதென்று சொல்லத்தகு முண்மையில், எளியேன்றன் உடல் பொருள் ஆவி மூன்றும் நின்திருவடிக்கே ஒப்புவித்தேன்; அடியேன் மனத்தகத்துள்ள மாசெல்லாம் மாற்றி எம்பிரானே! நீ திருவுள்ளங்கொண்டருளியபடி எப்படியோ அப்படியே அருளுதல் முறைமையாகும்.

    தன்னிழப்பின் உண்மை வருமாறு :

'சலமிலனாய் ஞானத்தால் தனையடைந்தார் தம்மைத்
    தானாக்கித் தலைவனவர் தாஞ்செய்வினை தன்னால்
 நலமுடனே பிறர்செய்வினை யூட்டியொழிப் பானாய்
    நணுகாமல் வினையவரை நாடிக் காப்பன்
 உலகினில்என் செயலெல்லாம் உன்விதியே நீயே
    யுண்ணின்றுஞ் செய்வித்துஞ் செய்கின்றா யென்றும்
 நிலவுவதோர் செயலெனக்கின் றுன்செயலே யென்றும்
    நினைவார்க்கு வினைகளெல்லாம் நீங்குந் தானே"
- சிவஞானசித்தியார், 10. 2 - 2
(1)
உளவ றிந்தெலாம் நின்செய லாமென வணர்ந்தோர்க்
களவி லானந்தம் அளித்தனை அறிவிலப் புன்மைக்
களவு நாயினேற் கிவ்வணம் அமைத்தனை கருத்துத்
தளருந் தன்மையிங் காரொடு புகலுவேன் தக்கோய்.
    (பொ - ள்.) தனித்தமிழ் மெய்ந்நூல்களின் உள்ளம்போன்று காணப்படும் உண்மைகளை நின் திருவருளால் உணர்ந்து உலகிடைக் காணப்படும் எவ்வகைச் செயலும் நின் திருவருட் செயலாமென உணர்ந்த மெய்யுணர்வினர்க்கு அளவில்லாத பேரின்பப் பெரும் பேற்றை அளித்தருளினை; அறிவு சிறிதுமில்லாத கீழ்மைக்குண நிறைந்த களவு முதலிய குற்றங்கள் நீங்காத நாய்போன்ற அடியேனுக்கு உலகிடையுழன்று துன்புறுதலாகிய இந்நிலையினை அமைத்தருளினை; அத் துன்பத்தால் மனந்தளரும் எளியேன் நிலையினை இங்கு யாரொடு புகலுவேன்; தக்கோனே!

(2)