பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

480

ஞானநெறிக் கேற்றகுரு நண்ணரிய சித்திமுத்தி
தானந் தருமந் தழைத்தகுரு - மானமொடு
தாயெனவும் தந்தென்னைத் தந்தகுரு என்சிந்தை
கோயிலென வாழுங் குரு.
     (பொ - ள்.) அடியேனுடைய உள்ளத்தைப் பெருங்கோயிலாகக் கொண்டு வீற்றிருந்தருளும் சிவகுருவானவரே. திருவடியுணர்வாம் நன்னெறிக்கு வாய்த்த மெய்க்குரு, எளியேன் பெற்றுய்ய வேண்டிய இம்மைப் பயனாகிய சித்தியும் உம்மைப் பயனாகிய முத்தியும் (அம்மைப் பயனாகிய திருவடிப்பேறாம் மெய்ப்புணர்ப்பும்) சிவனடியார்கட்கு வழங்கும் தானமும், செந்நெறி யொழுகும் தருமமும் செழிக்கச்செய்த சிவகுரு; பெருமையுடன் வந்தருளி அடியேனுக்குந் தாய் போன்று தலையளி புரிந்து சிவதீக்கை முறையான் நன்னெறிக்குய்க்கும் நற்பேறு தந்தருளினமையான் எளியேனை ஈன்றகுருவும் அவரே யாவர்.

     (வி - ம்.) இத்திருப்பாட்டிற் 'குரு' வென்னும் சொல் நான் கிடங்களில் காணப்படுகின்றது. இது நன்னெறி நாற்படிகளின் குறிப்புணர்த்துநலமாகும். நாற்படி : 1. சீலம் 2. நோன்பு 3. செறிவு 4. அறிவு என்பன.

(82)
சித்துஞ் சடமுஞ் சிவத்தைவிட இல்லைஎன்ற
நித்தன் பரமகுரு நேசத்தாற் - சுத்தநிலை
பெற்றோமே நெஞ்சே பெரும்பிறவி சாராமல்
கற்றோமே மோனக் குரு.
     (பொ - ள்.) விளக்க விளங்கும் அறிவுடைப் பொருள்களாகிய அடிமையாம் ஆருயிர்களும், இயக்க இயங்கும் அறிவில்லாத பொருள்களாகிய உடைமையாம் மாயாகாரியப் பொருள்களும் விழுமியமுழு முதல்வனாம் சிவபெருமானின் திருவருட்டுணையின் இயக்கத்தினாலேயே விளக்க முற்றியங்குகின்றன. (அம்முறை பற்றி இவ்விரண்டும் சிவத்தை விடவேறில்லை யென்றோதப்பட்டன.) அதனால் அவை சிவத்தைவிட வேறில்லை யென்று, என்றும் பொன்றா நித்தியனாகிய தனிமுதற்குருவின் பெருந்தண்ணளியால் தூய நன்னிலையைப் பெற்றுள்ளோம்; அப்பேற்றால் நெஞ்சமே, எல்லையில்லாப் பெரும்பிறவிப் பெருங்கடற்றுன்பம் வந்துபொருந்தாவண்ணம், மோனக் கலையெனப்படும் உரையற்ற உயர்வற உயர்ந்த ஒருநிலையினைக் கற்றுக் கைவரப் பெற்றோம்.
(83)
கொச்சகக் கலிப்பா
ஏசற்ற அந்நிலையே எந்தைபரி பூரணமாய்
மாசற்ற ஆனந்த வாரி வழங்கிடுமே
ஊசற் சுழல்போல் உலகநெறி வாதனையால்
பாசத்துட் செல்லாதே பல்காலும் பாழ்நெஞ்சே.