பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

611
உள்ளத்தி னுள்ளே ஒளித்திருந்தென் கள்ளமெல்லாம்
வள்ளல்அறிந் தால்எனக்கு வாயுமுண்டோ பைங்கிளியே.
     (பொ - ள்) அடியேனுடைய நெஞ்சகத்தே மெய்ப்புணர்ப்பாய்க் கலந்திருந்தும், எளியேன் காணாவாறு ஒளித்திருந்து யான் செய்யும் வஞ்சனைகள் அனைத்தையும்1 வள்ளலாகிய என் தலைவன் அறிந்தருளினன். அதனால் ஏழையேன் ஒன்றை மறைத்துக் கூற அடியேனுக்கு வாயுமுண்டோ?

(55)
 
ஆகத்தை நீக்குமுன்னே ஆவித் துணைவரைநான்
தாகத்தின் வண்ணந் தழுவனோ பைங்கிளியே.
     (பொ - ள்) அடியேன் இவ் வுடம்பினின்று நீங்குமுன்னே என் ஆருயிர்க்குத் துணையாகிய தலைவரை எளியேன் காதல் விருப்பத்தின்படி தழுவுவேனோ? ஆகம் - உடம்பு.

(56)
 
தானே சுபாவந் தலைப்படநின் றான்ஞான
வானோ னவரும் வருவாரோ பைங்கிளியே.
     (பொ - ள்) (ஒன்றேயுளது என்னும் ஏகான்மவாத வுணர்வாகிய தற்போத முனைப்பால்) தானே இயல்பென்னும் தன்மை தலைப்பட்டு நின்றால் திருச்சிற்றம்பலம் எனப்படும் சிதாகாய வடிவினனான இறைவன் எளியேன்பால் வந்தருள்வனோ? (வாரான் என்பதாம்.)

(57)
 
கள்ளத் தலைவரவர் கைகாட்டிப் பேசாமல்
உள்ளத்தில் வந்த உபாயமென்னோ பைங்கிளியே.
     (பொ - ள்) அடியேனிடத்துள்ள மறைப்பாற்றலாகிய திரோதான சத்தியால் மறைக்கப்பட்ட கள்ளத் தலைவராகிய என் நாயகர் அறிவடையாளக்கை (சின் முத்திரை) காட்டி உரையாடாது எளியேனுள்ளத்தில் வந்தருளிய விரகு என்னோ? விரகு - உபாயம்.

(58)
 
 
1. தெய்வ வணக்கம்
நீர்பூத்த வேணி நிலவெறிப்ப மன்றாடுங்
கார்பூத்த கண்டனையான் காணுநாள் எந்நாளோ.
     (பொ - ள்) வான்புனலாகிய கங்கை தங்கியுள்ள திருச்சடையின் மேல் ஆருயிரின் அடையாளமாகிய பிறை திகழத் தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண் ஐந்தொழிலருட் பெருங்கூத்தை இயற்றியருளும் திருநீலகண்டப் பெருமானாம் அம்மையம்பலவாணனைத் திருவருளால் அடியேன் கண்டு வழிபடும் நாள் எந்நாளோ?

(1)
 
 
 1. 
'கள்ளனேன்'. 4. 75 - 3.
 "  
'ஏகமாய் நின்றே', சிவஞான போதம் 11. 1 - 2.