(வி - ம்.) அன்பறிவு ஆற்றல்கள் மூன்றும் சிவபெருமானுக்கு முக்கண்கள் என மொழியப்படும். அன்பு இடக்கண்ணாகும். ஆற்றல் வலக்கண்ணாகும். அறிவு நெற்றிக்கண்ணாகும். இம் மூன்றும் திருவருளின் அகநிலையாகும். புறநிலையைக் கூறுங்கால் முறையே திங்கள், ஞாயிறு, தீ எனக்கூறப்படும். சிவபெருமான் ஒருவனையன்றி வேறெத்தேவரையு முக்கண்ணரென்றழைக்கு முறை இன்றாம். அம்மையாரையும் மூத்தபிள்ளையாரையும் முக்கண் உடையவராகக் கூறுதற்குக் காரணம் அவர்கள் சிவபெருமானின் திருவாற்றல்களே என்னும் மெய்ம்மையான் என்க.
உலகம் ஒடுக்கப்படுங்கால் மாயோனும் அயனும் அவ்வுலகத்தோடும் ஒடுக்கப்படுபவரேயாவர். இது தொழிற்றுறைகளிலுள்ள அலுவல்கள் அறவே இயங்காதவாறு அத் துறைகளையே மூடிவிடுங்கால் ஒரு புடையொப்பாக அவ் வலுவலர்களும் மூடப்பட்டவரே யாவர் என்பது போன்றாகும். ஆருயிர்கட்கு முப்பத்தைந்து கருவிகளோடும் கூடி முற்றாக அறிவு விளங்குவதற்கு நிலைக்களம் புருவமத்தியாகும். அக் குறிப்புத் தோன்றவே நெற்றிக்கண் கூறப்படுகின்றது.
உலகம் ஒடுக்கப்படுங்கால் அயனும் அரியும் சேரவொடுக்கப்படுவர் என்னும் உண்மை வருமாறு :
| "இலயித்த தன்னிலில யித்ததாம லத்தால் |
| இலயித்த வாறுளதா வேண்டும் - இலயித்த |
| தத்திதியி னென்னின் அழியா தவையழிவ |
| தத்திதியு மாதியுமா மங்கு" |
| - சிவஞானபோதம், 1. 2 - 1 |
(2)
கண்டன அல்ல என்றே கழித்திடும் இறுதிக் கண்ணே | கொண்டது பரமா னந்தக் கோதிலா முத்தி அத்தால் | பண்டையிற் படைப்புங் காப்பும் பறந்தன மாயை யோடே | வெண்டலை விழிகை காலில் விளங்கிட நின்றான் யாவன். |
(பொ - ள்) "கண்டன . . . முத்தி" - (மெய்ப்பொருளுணர்வு கைவரப் பெறுவதற்கு) காணப்படும் மாயாகாரியப் பொருள்களனைத்தும் அம் மெய்ப் பொருள் அல்ல அல்ல வென்று கழித்துக்கொண்டே சென்ற இடத்துத் திருவருளால் முடிவின்கண் காணப்படும் மெய்ப்பொருளொன்றே பேரின்ப நிறைவாய்க் குற்றஞ் சிறிதுமிலதாய் உள்ள வீடு பேறாகும். (அம் மெய்ப் பொருள் விழுமிய முழுமுதற் சிவபெருமான் ஒருவனே.)
"அத்தால்..யாவன்" - (கழித்தலெனக் கூறப்படும்) நேதி வழியால் கண்டமெய்ப்பொருள் சிவபெருமான் ஒருவனே. அதனால் (பேரொடுக்கம் தோன்றுவதன்முன்னாகிய) பண்டையின் நிகழ்ந்த அயன்றன் படைப்புத்தொழிலும் அரியின் காப்புத்தொழிலும் அவர்கள்தம்மொடும் பறந்து போயின. போகவே காரிய மாயையும் காரணத்தின்கண் ஒடுங்கிற்று. (அயனும் அரியும் முழுமுதல்வ ரல்லரென்னும் மெய்ம்மைக்குப் போதிய சான்றாக) அரனார் திருக்கையின்