பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

519

"வீடு ஞானமும் வேண்டுதி ரேல்விர தங்களால்
 வாடின் ஞானமென் னாவது மெந்தை வலஞ்சுழி
 நாடி ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டிசை
 பாடு ஞானம்வல் லாரடி சேர்வது ஞானமே."
- 2. 2 - 11.
(14)
முற்றுமோ எனக்கினியா னந்த வாழ்வு
    மூதறிவுக் கினியாய்நின் முளரித் தாளில்
பற்றுமோ சற்றுமில்லை ஐயோ ஐயோ
    பாவிபடுங் கட்கலக்கம் பார்த்தி லாயோ.
     (பொ - ள்.) அடியேனுக்கு இனிமேல் இனிய பேரின்பப் பெருவாழ்வு கிட்டுமோ? பேரறிவுக்கு இனிமையானவனே, நின்னுடைய திருவடித் தாமரைக்கண் வைக்கவேண்டிய பெருங்காதலாகிய பற்றோ ஒரு சிறிதுமில்லை; அந்தோ! அந்தோ! கொடியேன் படுகின்ற கண் கலக்கம் பார்த்திலாயோ?

(15)
பார்த்தனவெல் லாமழியும் அதனாற் சுட்டிப்
    பாராதே பார்த்திருக்கப் பரமே மோன
மூர்த்திவடி வாயுணர்த்துங் கைகாட் டுண்மை
    முற்றியென தல்லல்வினை முடிவ தென்றோ
.
     (பொ - ள்.) சுட்டிப்பார்த்த பொருள்கள் அனைத்தும் மறையும் தன்மைய; அதனால் அவ் வுலகப் பொருள்களைச் சுட்டிப்பாராமல் தனிமுதற் பொருளாம் நின் திருவடியினை இடைவிடாது பார்த்திருக்குமாறு பரம்பொருளே. மோனகுரு வடிவாகி யுணர்த்தியருளிய கையால் காட்டிய உண்மையானது முற்றுப்பெற்று, எளியேனுடைய துன்பத்திற் கேதுவாகிய கன்மங்கள் முடிவு பெறுவது எந்நாளோ?

(16)
என்றுளைநீ அன்றுளம்யாம் என்பதென்னை
    இதுநிற்க எல்லாந்தாம் இல்லை யென்றே
பொன்றிடச்செய் வல்லவன்நீ யெமைப்ப டைக்கும்
    பொற்புடையாய் என்னின்அது பொருந்தி டாதே.
     (பொ - ள்.) தேவரீர் என்றுள்ளீர் அன்றே ஆருயிர்களாகிய அடியேங்களும் உள்ளனம்1 என்று (இறைவன் நூல்கள்) கூறுவதன் பொருள் யாது? இது கிடக்க, சுட்டியுணரப்படும் உலகமும் உலகியற் பொருள்களும் எல்லாம் (தோன்றியவாறே ஒடுங்குந்தன்மையில்) இல்லையென்னும்படி அழிந்திடச் செய்யும் முடிவிலாற்றலுடையவனாகிய நீ எங்களைப் படைத்தருளும் எழிலுடையாய் என்று கூறுவது எங்ஙனம் பொருந்தும்?

 
 1. 
'பதிபசு' பாசம், 10-159.