பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

583
உதைத்துத் தள்ளும் பசுநினைவோ டொக்கும். காலி - பசுக்கூட்டம்.

(302)
 
குற்றங் குறையக் குணமே லிடஅருளை
உற்றவரே ஆவிக் குறவாம் பராபரமே.
     (பொ - ள்) பிறர்க்கும் பிறவுயிர்கட்கும் தமக்கும் துன்பம் விளைவிக்கும் குற்றச் செய்கைகள் குறைந்து வரவும், அதுபோல் இன்பம் விளைக்கும் இன்பச் செயல்கள் மேலோங்கிப் பெருகி வரவும் துணை புரியும் நின்திருவருளைப் பொருந்தியவரே, அடியேன் ஆருயிர்க்குச் சீரிய உறவாவர்.

     (வி - ம்.) இரக்கமில்லாதவர் உயிரில்லாதவராவர் என்னும் உண்மை வருமாறு :

"இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
 மரப்பாவை சென்றுவந் தற்று"
- திருக்குறள், 1058.
(303)
 
ஓருரையால் வாய்க்குமுண்மைக் கோரனந்த நூல்கோடிப்
பேருரையாற் பேசில்என்ன பேறாம் பராபரமே.
     (பொ - ள்) செம்பொருட்டுணிவாகிய சித்தாந்தப் பெருமொழியாம் "சிவசிவ" என்னும் ஒரு மொழியால் வாய்க்கும் உண்மைப் பொருளின் பொருட்டுத் தனித்தமிழ் மெய்கண்ட நூல்களுக்கு ஒரு சிறிதும் ஒவ்வாத, உண்மையுணர்த்துந் திறனில்லாத நூல்களையும் அவற்றின் விரிந்த உரைகளையும் கோடிக்கணக்காகப் படித்தாலும் பகர்ந்தாலும் பயன் என்? (ஏதுமில்லை.)

(304)
 
சொல்லுஞ் சமயநெறிச் சுற்றுக்கு ளேசுழலும்
அல்லல் ஒழிவதென்றைக் கையா பராபரமே.
     (பொ - ள்) புறப்புறம், புறம், அகப்புறம் என்று நூல்களாற் சொல்லப்படும் முக்கூற்றுப் புறச்சமயங்களுள் ஆருயிர்கள் தத்தம் வினைக்கீடாக நின்று அச் சுற்றுக்குள்ளேயே சுழன்று நீங்காத அல்லலுறும்; அத்தகைய சமய அல்லல்கள் அடியேனுக்கு இல்லாதொழிவது எந்நாளோ?

(305)
 
பிடித்ததையே தாபிக்கும் பேரா ணவத்தை
அடித்துத் துரத்தவல்லார் ஆர்காண் பராபரமே.
     (பொ - ள்) (ஆருயிர்கட்கு அறிவு விளக்கம் உண்டாகும் பொருட்டே மேன்மேற் பிறவியும் நூல்களும் உண்டாகியுள்ளன. இவ்வுண்மைகளை ஆய்ந்துணரவும் உணர்ந்தார் வழிநின்றொழுகவும் வேண்டுவது அவ்வுயிர்களின் தலைக்கடனாகும்.) இவ் வுண்மையினை யுணராதும் உணர முயற்சி செய்யாதும் இருந்துகொண்டு தாங்கள் கைக்கொண்டுள்ள சமயநெறியினையே மேலானதெனக் கொண்டு நிலைநாட்டும்படி செய்யும் பெரிய ஆணவத்தை அடித்துக் கீழ்ப்படுத்துத் துரத்தும் வன்மையுடையார் எவருளர்?) திருவருளையன்றி ஒருவரும் இலர் என்பதாம்.)

(306)