பக்கம் எண் :

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

643
பொங்கேத மான புழுக்கமெலாந் தீரஇன்பம்
எங்கேஎங் கேஎன் றிரங்குநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) மிகுதியான குற்றம் பொருந்திய மனத்துன்ப முற்றும் நீங்கிச் சிவப்பேரின்பம் எங்கே எங்கே கிடைக்கும் என்று மனமிரங்கி வருந்துநாள் எந்நாளோ?

(10)
கடலின்மடை கண்டதுபோற் கண்ணீ ராறாக
உடல்வெதும்பி மூர்ச்சித் துருகுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) பெருங்கடல்நீர் மடைதிறந்து பெருக்கெடுத்தது என்று சொல்லும்படி அடியேனுடைய தேட்டத்தால் எழுங் கண்ணீரானது ஆறுபோற் பெருகியோட, உடம்பானது வெதும்பி உயிர்ப்படங்கி மனமுருகுநாள் எந்நாளோ?

(11)
புலர்ந்தேன் முகஞ்சருகாய்ப் போனேன்நிற் காண
அலந்தேன்என் றேங்கி அழுங்குநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) முகம் வாடினேன்; உடம்பும் சருகுபோல் வாடிற்று; நின் திருவடியைக் காணவேண்டுமென்று பெருவேட்கையுற்று ஏங்கி வருந்துநாள் எந்நாளோ?

(12)
புண்ணீர்மை யாளர் புலம்புமா போற்புலம்பிக்
கண்ணீருங் கம்பலையுங் காட்டுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) கொடிய புண் எய்தியவர்கள் பொறுக்க முடியாது வருந்திப் புலம்புவது போன்று அடியேனும் நின் திருவடிப் பேற்றின்ப மெய்தாது வருந்திக் கண்ணீர்ப் பெருக்கமும், மெய்ந்நடுக்கமும் நின் திருமுன் எளியேனுக்கு ஏற்படுநாள் எந்நாளோ?

(13)
போற்றேனென் றாலும்என்னைப் புந்திசெயும் வேதனைக்கிங்
காற்றேன்ஆற் றேனென் றாற்றுநாள் எந்நாளோ.
    (பொ - ள்.) அடியேன் இதுகாறும் போற்றிமந்திரம் புகன்று பூத்தூவி வழிபாடு செய்திலன்; ஆயினும், எளியேனுடைய இருவினைக்கீடாக வருத்தும் புத்தியெனுங் கருவியின் துன்பத்திற் காற்றுதல் செய்யேன்; ஆற்றுதல் செய்யேன் என்று வருந்திப் புலம்புநாள் எந்நாளோ? புந்தி - புத்தி.

(14)
பொய்ம்முடங்கும் பூமிசில போட்டலறப் பூங்கமலன்
கைம்முடங்க நான்சனனக் கட்டறுவ தெந்நாளோ.
    (பொ - ள்.) காரணத்தினின்றுங் கட்புலனாகக் கடவுளருளால் காரியப்படும் இவ்வுலகம் அக் காரணத்தின்கண் ஒடுங்கும், தன்மையால் நிலையுள்ளதாகாது. அதனால் அதனைப் பொய்உலகு என்ப; இத்தகைய உலகின்கண், எளியேனை வினைக்கீடாகப் பிறப்பிக்கும் தாமரை இருக்கையோனாகிய படைப்போன் பிறப்பித்தலைச் செய்யாது கை