பக்கம் எண் :

New Page 1

 

       காப்புப் பருவம்

177

தேனைப் பருக வந்தடைந்தனபோல, உருத்திராக்க மாலை சேக்கிழார் கழுத்தில் பொலிந்தன என்பார்,   “ குவளை பொலிய இன்தேன் நிரம்ப உண அளி அடைந்தாங்கு அத்தராய்க் கண் மணித் தொடைபொலிதர “  என்றனர்.  ஆகவே, இவ்வடிகளில் மயக்க அணியும், தற்குறிப்பு ஏற்ற அணியும் அமைந்திருத்தலைக் காணவும்.  அளி, (வண்டு) உருத்திராக்கம் போன்றது என்பது உவமை அணி.  ஐம்பெரு்ங் குரவர்களுள், ஞானாசாரியரும் ஒருவர்.  சேக்கிழார் ஆசிரிய முறையில் இருத்தலின் அத்தராய் என்றனர்.  அத்தர் என்பது தந்தையைக் குறிக்கும் சொல்லேயாயினும், ஈண்டு ஆசாரியர் என்ற பொருளையே பொருத்தலாம்.  தலைவர் என்ற பொருளையும் கொள்ளலாம்.  சேக்கிழாரின் உடல் அழகைக் கருதி  “ அம்புயத்தவன் “  என்றனர்.  அதாவது,  “ அழகிய தோள்களை உடையவர் “  என்பதாகும்.  அல்லது தாமரை மலரில் விளங்கும் பிரம்மனைப் போன்றவர் எனினும் ஆகும்.  இதனால் பிரம்மன் திருநீறும் உருத்திராக்கமும் அணிந்திருந்தான் என்பதும் புலனாகிறது.  “ வானவர்மேலது நீறு “  என்பது தமிழ் மறை அன்றோ? குன்றத்தூர் அளவிலாத வளங்களைப் பெற்றது என்பார்,  “ அளவா வளம் துன்று குன்றை நகர் “  என்றனர்.  மேலும் இந்நகர், நகர்க்கு வேண்டும் வளத்தையுடையது என்னும் பொருளில்,  “ அளவாம் வளம் துன்னு “  என்று கூறினும் அமையும்.  இத்துடன் இன்றி, இக்குன்றத்தூர் விரும்பும் தகையது என்பார் போல்,  “ நம்பு குன்றை “  என்றனர்.   “ நம்பும் மேவும் நசையா கும்மே “  என்பது தொல்காப்பியம்.  ஆதலின், நம்பு என்பதற்கு விரும்புதல் என்று பொருள் கூறப்பட்டது.  இந்நகரில் வாழ்பவர்கள் எவராலும் நம்புதற்குரியவர்கள் என்ற பொருளில், “ நம்பு “  எனும் சொல் அமைக்கப்பட்டது என்று கூறினாலும் பொருத்தமே.   “ குன்றை “  என்பது குன்றத்தூர் என்பதன் மரூஉ வழக்காகும்.  சேக்கிழார் பெருமானார் ஆளியே-சிங்கமே ஆனாலும், அன்பும் இரக்கமும் உடையார் ஆதலின், அருள் ஆளியார் “ எனப்பட்டார்.