பக்கம் எண் :

New Page 1

178

             காப்புப் பருவம்

    “பத்தராய என்றெடுத்தருள் திருக்கவி “  என்றது  திருத்தொண்டைத்  தொகையில் உள்ள பத்தாவது பாட்டாகும்.

பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
    பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
    திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதும் திருமேனி தீண்டுவார்க்கும் அடியேன்
    முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடிச்சார்ந்தார் அடியார்க்கும் அடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே

என்பது,

    சுந்தரர் தனித்தனி அடியார்கட்குத் தாம் அடிமை என்று கூறியிருப்பினும், முற்ற முடிய எல்லா அடியார்களையும் கூடி முடித்ததாக அமையாது.  ஆகவே அவர், பத்தராய்ப் பரமனைப் பணிவார், பாடுவார், சித்தத்தைச் சிவன்பால் வைத்தார்.  திருவாரூரில் பிறந்தார், முப்போதும் இறைவன் திருமேனியைத் தீண்டிப் பூசிப்பார்.  திருநீறு பூசியோர், தமக்குப் பின்னால் இறைவன் திருவடித் தொண்டர் ஆயினார் எவர்களாயினும் அவர்கட்கெல்லாம் தம் பரந்த மனப்பான்மையால் அடியேன், அடியேன் என்று பாடிக் காட்டி இருக்கின்றார் எனக் கொண்டு அப்பாடல் அருள்பாடலாகவும் திருப்பாடலாகவும் இருத்தலின் திரு பிள்ளை அவர்கள்,  “அருள் திருக்கவி “ என்றனர்.

    திருநாவலூரார் தாம் விரும்பிய வண்ணம் இறைவர் துணையால் பரவையார், சங்கிலியார் ஆகிய இரு மாதர்களை மணந்தனர்.  மணந்தும் அவ்விருவர் வாயிலாகப் பிள்ளைப் பேற்றை உற்றிலர்.  என்றாலும், இரு பிள்ளைகட்குத் தந்தையார் ஆயினர்.  அப்பிள்ளைகள் கோட்புலியார் தம் மக்களாகிய சிங்கடி, வனம்பகை எனும் இருவர்கள்.  இவர்களைக் கோட்புலியார் நம்பி ஆரூரர் முன் நிறுத்தி, அவர்களை அடிமைகளாக ஏற்றருள வேண்டியபோது, அவ்வேண்டுகோளை மாறாது மக்களாக ஏற்று அருளினர்.  இதனைச் சேக்கிழார்,