பக்கம் எண் :

New Page 1

244

             செங்கீரைப் பருவம்

    (அ. சொ) ஆம்பல்-குவளை மலர், அவாவுதல்.  விரும்புதல், மேய-பொருந்திய, புயாசல-மலைபோன்ற தோள்களையுடையவரே, ஆகர-இருப்பிடமாய் உள்ளவரே, சேவையர்-வேளாளர், காவல-தலைவரே, தோம்-குற்றம், சினகரம்-கோயில், சுடர்-ஒளியுடைய, தூகேம்-குப்பைக் கூளங்களைக் கூட்டமாட்டோம், நண்ணேம்-சேரமாட்டோம், நயவேம்-விரும்ப மாட்டோம், வியவேம்-அதிசயத்துப் பாராட்ட மாட்டோம், நாள்-புதிய, அன்று மலர்ந்த, கொடு-கொண்டு, ஏத்தி-துதித்து, நயத்தலை-அன்புகொள்ளுதலை, கூம்பல்-கைகளைக் குவித்தல், எய்யோம்-பின்னிடமாட்டோம், இளைக்கமாட்டோம், கோமான்-தலைவரே, எவன்கொல்-எது அவாயது-விரும்பியது, நல்கில்-தந்தால், குலாவும்-விளங்கும், மகிழும் உவப்பு-மகிழ்ச்சியை, உறுவோம்-அடைவோம்.

    விளக்கம் :  பெரியோர்கள் தாம் நற்குண நற்செய்கையுடையராயினும் தாம் நற்குணம் இல்லாதவர் போல் கூறிக்கொள்ளுதல் அவர்கள் இயல்பு.   “ பணியுமாம் என்றும் பெருமை “ என்பதன்றோ வள்ளுவர் வாக்கு !  அந்த முறைக்கு இணங்க அப்பர் பெருமானார் கூறியதையும் ஈண்டு நினைவு படுத்திக்கொள்ளலாம்.

குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்
    குற்றமே பெரிதுடையேன் கோல மாய
நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்
    நல்லாரோடு இசைந்திலேன் நடுவே நின்ற
விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தேன் அல்லேன்
    வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்
இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்
    என்செய்வான் தோன்றினேன் ஏழை யேனே

என்ற தாண்டகத்தை காண்க.  ஈண்டுக் குற்றமே பெரிதுடையோன் என்பதற்கேற்பத் தோம்பல உடையேம் என்றார்.  இறப்புக்கும் பிறப்புக்கும் அஞ்சுதல் வேண்டும்.  ஞானிகளும் இவற்றிற்கு அஞ்சியுள்ளனர்.