பக்கம் எண் :

7

304

             தாலப் பருவம்

7.     அடியார் பெருமையும் அருமையும் நாளும்
           அறியம் பலவாணர்
       அவர்வர லாறு விரித்துரை செய்பவர்
           ஆரென உட்கருதிக்
       கடியார் மற்றவர் அன்பத் தனையும்
           கண்காண் படிசெய்து
       காமரு முதலும் எடுத்தரு ளினர்இக்
           கடல்சூழ் புவிஇடைஇப்
       படியார் பெற்றார் தமிழ்மான் மியம்எப்
           பாடைக ளுக்குளதிப்
       பாக்கியம் நம்தவம் என்று பலோரும்
           பகரப் படுவதீந்
       தடியார் தடிசூழ் குன்றைத் திருமுனி
           தாலோ தாலேலோ
       சைவப் பயிர்தழை யத்தழை யும்புயல்
           தாலோ தாலேலோ

    [அ. சொ.] அம்பலவாணர்-நடராசப் பெருமான், கடியார்-விளக்கம் அமைந்த, அருள் புரிந்த, கண்-ஞானக்கண், காண்படி-காணும்படி, காமரு-அழகிய, முதலும்-உலகெலாம் என்ற முதல் தொடரையும், புவி-பூமி, பாடைகள்-மொழிகள், பலோரும்-பலபேரும், பகரப்படுபவ-சிறப்பித்துக் கூறப்படுபவரே, தீம்-இனிய, தடி-கரும்பு, ஆர்-பொருந்திய, தடி-வயல்.

    விளக்கம் :  இறைவர் அடியார்களுடைய பெருமையையும் அருமையையும் நன்கு அறிந்திருந்தமையால்தான், அவ்வப்போது, அவர்கட்கு ஏற்பட்ட இன்னல்களை எல்லாம் போக்கி அருளினர்.  அடியார்களின் பெருமையும் அருமையும் அறிந்ததனால் அன்றோ, திருநாளைப் போவார்க்கும், தில்லைவாழ் அந்தணர்கட்கும் கீழ்வரும் கட்டளை இட்டருளினர்.