பக்கம் எண் :

வர

40

             காப்புப் பருவம்

வராய்ப் போரிடுகையில், அதிசூரன் நாயனாரைக் கொன்றான்.  இறைவர் நாயனார்க்குத் திருவருள் புரிந்தார்.

    கண்ணப்பர் கன்னி வேட்டையாடக் காளத்தி அருகே சென்றனர்.  வேட்டையாடிய பின்னர், காளத்தி மலையில் உள்ள காளத்தி நாதரைக் கண்டு, அவரை விட்டுப் பிரியாது, வேளாவேளைக்கு விலங்கின் தசையை உண்பித்து வந்தார்.  சிவகோசரியார் என்பவரும் இறைவரைப் பூசிக்கும் பேறு பெற்றவர்.  அவர் ஆலயத்தில் மாமிசத் துண்டுகள், எலும்புகள் இருப்பது கண்டு, அதன் காரணம் அறியாது வருந்தி, அவை அங்கு வாராவாறு அருள்புரிய இறைவரை வேண்டினார்.  இறைவர் அவர் கனவில்,  “நமக்கு அவ்வாறு மாமிசம் ஊட்டும் அன்பரது அன்பைக் காட்டுவோம்.  நீ மறைந்து காண்க” என்று கூறினார்.  அவ்வாறே சிவகோசரியார் மறைந்திருந்தபோது, இறைவர் தம் கண்ணில் செந்நீர் ஒழுகச் செய்தார்,  திண்ணனார் என்ற இயற் பெயருடைய அவர், காட்டு மூலிகை கொண்டு செந்நீர் நிற்க முயன்றும், நில்லாமை கண்டு, தம் ஒரு கண்ணைத் தோண்டி அப்பினர்.  இறைவர்  அடுத்த கண்ணிலும் இரத்தம் ஒழுகச் செய்ய, மற்றுமொரு கண்ணையும் தோண்டி அப்ப முயன்றபோது இறைவர் தடுத்துத் தம் பக்கலில் இருக்க அருள் செய்தார்.  அன்று முதல் திண்ணனார் கண்ணப்பர் எனப்பட்டார்.

    குங்கிலியக் கலயர் என்பவர் திருக்கடவூர்த் தலத்தில் இறைவர்க்குக்  குங்கிலியப் புகையூட்டும் தொண்டில் ஈடுபட்ட ஒரு பிராமணர்.  குங்கிலியத் தொண்டால் இல்லம் வறுமையுற்றது.  அந்நிலையில் அவர் மனைவியார் தம் தாலியை ஈந்து அரிசி முதலியன வாங்குமாறு அளிக்க, அதனையும் குங்கிலியம் வாங்கப் பயன்படுத்தியவர்.  இவர்தம் உண்மை அன்பால் இறைவர் இவரது வறுமையை நீக்கிப் பெருஞ் செல்வர் ஆக்கினார்.  அந்நிலையிலும் தம் திருத்தொண்டினையே பெரும் பேறாக இவர் மேற்கொண்டு சிவனடியார்களை உண்பித்து இறைவன் திருவருளைப் பெற்றவர்.