பக்கம் எண் :

தன

 

       வாரானைப் பருவம்

521

தன்னிடம் இருந்த குழந்தையை ஏவி அப்பா என்று வணிகனைக் கட்டி அணைக்கச் செய்தாள்.  என்றாலும், வணிகன் அவ்வழி வந்த வேளாளரிடம், “ஐயா !  இவள் என் மனைவியல்லள்.  இவள் ஒரு பேய் ;  நான் இவளோடு இங்கு இவ்விரா இருப்பேனானால், இவள் என்னை அறைந்து கொன்று விடுவள்” என்று கூறினான்.  இருவர் பேச்சுக்களையும் கேட்ட வேளாளர்கட்கு இன்னவாறு தீர்ப்புக் கூறுவது என்பது புலனாகவில்லை.

    இறுதியில் அவர்கள் வணிகனை நோக்கி, “நீ இவளோடு இன்று இரவு இங்கு இரு.  அப்படி இருப்பதால் நீ இறக்க நேரின்.  நாங்கள் எழுபதின்மரும் உன் ஓர் உயிர் பொருட்டு உயிர் விடுவோம்” என்று கூறி இருக்குமாறு வற்புறுத்திச் சென்றுவிட்டனர்.  வணிகன் இரவு அவளோடு இருந்தான் ;  அவ்விரவே இறந்தான்.  மறுநாள் வேளாளர்கள் வந்து கண்டபோது மாதராளும், மகவும் அச்சத்திரத்தில் இல்லாது, வணிகன் மட்டும் இறந்து இருத்தலைக் கண்டு, தாம் சொன்ன சொல்லை நிறைவேற்றும் நிலையில் தீ வளர்த்து அதில் மூழ்கி இறந்தனர்.  இவ்வரலாறே இப்பாடலில் அமைந்துள்ளது.

    இவ்வாறு நீலி வஞ்சித்து வணிகனைக் கொன்ற குறிப்பைத் திருஞானசம்பந்தரும்,

    வஞ்சப்படுத்து ஒருத்தி வாணான்கொள்ளும் வகை
                                           ( கேட்டு
    அஞ்சும் பழையனூர்

என்றும் பாடியுள்ளனர்.

    இவ்வரலாற்றை உமாபதிசிவனாரும்,

    மாறுபடு பழையனூர் நீலிசெய்த வஞ்சனையால்
        வணிகன் உயிர் இழப்பத் தாங்கள்
    கூறியசொல் பிழையாது துணிந்து செந்தீக்
        குழியில்ஏழு பதுபேரும் முழுகிக் கங்கை
    ஆறணிசெஞ் சடைத்திரு வாலங்காட் டப்பர்
        அண்டமுற நிமிர்ந்தாடும் அடியின் கீழ்மெய்ப்
    பேறுபெறும் வேளாளர் பெருமை எம்மால்
        பிரித்தளவிட் டிவளவெனப் பேச லாமோ

என்று புகழ்ந்து பாடினர்.