New Page 1
“பால்நினைந்தூட்டும் தாய்”
என்றும், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் “குழவி அழுத குரல் கேட்டுத் தாய் வந்து அமுதூட்டும் கெழுதகை”
என்றும் தெரிந்து கூறினர். அங்ஙனம் குன்றை நகர் மக்கள் தம்மை அடைந்தவர்கட்குத் தேவை
தெரிந்து உதவினர் என்பதையும், வேட்டவர்க்கு வேட்டவாறு வழங்கினர் என்பதையும் இச்சொல் அறிவிக்கின்றது.
அம்மை என்பதனை அழகிய மேகம் என்றோ நீரையுடைய மேகம் என்றோ பொருள் கொண்டு காணின், அந்நகரவாசிகள்
மேகம் போலக் கைம்மாறு கருதாது உதவி புரிபவர் என்பதும் தெரியவரும். வள்ளுவர் “கைம்மாறு
வேண்டா கடப்பாடு மாரி” என்று அன்றோ கூறியுள்ளனர்? இத்தகையர் வாழும் குன்றை நகர் ஆளியுடன்
ஆட வருதலால் கைம்மாறு வேண்டா உதவியைப் பெறலாம் என்ற குறிப்பும் இங்கு இருத்தலைக் காண்க.
இப்பாடலும் பேத உபாயம் அமையப் பாடப்பட்டது.
(66)
6. குறையுடைய
பாம்பொன் றெடுத்துண் டுமிழ்ந்திடக்
குலைகுலைந் துழல்வை
எங்கள்
கோமான் பெருங்கல்வி
ஆட்சியை உணர்த்துசெங்
குருமணிச் சூட்டுமோட்டு
நிறைவுகெழு துத்திப்
பணாடவிப் பாம்பொன்று
நேரடைய மன்றுள்நாணும்
நினையீன்ற தொருபரவை
இலகுவே பாரம்என
நெல்நுனைத்
தனையும்எண்ணேன்
முறையின்ஒரு சிறுநூக்கில்
எழுபரவை யும்புக
முடித்துற நிறுத்தான்இவன்
மொழிஎங்கள் தம்பிரான்
வல்லபம் உணர்ந்திலைகொல்
முத்தமா ளிகைவானயாற்
றறைமணித் திடராய
குன்றைநகர் ஆளியுடன்
அம்புலீ ஆடவாவே
அருள்உருத்
தேசுபொலி அருள்மொழித் தேவனுடன்
அம்புலீ ஆடவாவே
|