பக்கம் எண் :

அப

 

       சிறுபறைப் பருவம்

687

    அப்பர் பாட்டில் அமைந்த உவமையின் வழி அரிய கருத்துப் புலப்படுகிறது.  அதாவது, இங்குக் குறிப்பிடப்பட்ட பொருள்கள் குழந்தை, இளைஞர், குமரர், முதியர் ஆகிய நால்வர்க்கும் இறைவன் தனித்தனி இன்பம் பயப்பவன் என்பது.  இதுபோலச் சேக்கிழாரது கவிகள், பசுப்பால், தேன் கருக்கரை, கற்கண்டு. பலா, மா, வாழை, திராட்சை, தேவாமுதம் போல இனிக்கும் என்றதனால் வாய்க்கும், குழல்,   வீணை  இசைபோலச்  சுவைக்கும்  என்றதனால் காதிற்கும்,  சிவமணம்  கமழும் என்றதனால் மூக்கிற்கும் இன்பம் தரும் என்ற அரியகருத்தும் அடங்கியுள்ளது. வாய், செவி, மூக்கிற்கும் இன்பம் தரும் முறையில் சேக்கிழார் கவிகள் அமைந்துள்ளனவே  அன்றி,   மெய்க்கும்  கண்ணிற்கும்  சுவை  பயக்கும்  முறையில் அமைந்திவவே என்று ஐயுறலாம்.  அங்ஙனம் ஐயுறுதற்கு இடமே இல்லை.  பெரிய புராணக் கவிகளைத் தொட்டாலும் இன்பம் உண்டு.  கண்ணால் பார்த்தாலும் இன்பம் உண்டு.  இவ்வாறு கவிகள் தொட்டாலும், கண்டாலும் சுவைக்கும் என்ற உண்மையினைத் தனிப்பாடல் திரட்டில் வரும்.

    மட்டாரும் தென்களந்தைப் படிக்காசன்
        உரைத்ததமிழ் வரைந்த ஏட்டைப்
    பட்டாலே சூழ்ந்தாலும் மூவுலகும்
        பரிமளிக்கும் பரிந்த ஏட்டைத்
    தொட்டாலும் கைம்மணக்கும் சொன்னாலும்
        வாய்மணக்கும் துய்ய சேற்றில்
    நட்டாலும் தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே
        பாட்டினது நளினம் தானே

என்ற பாடலால் அறியலாம்.  மேலும், சிவஞான முனிவர் பெரிய புராணத்தைத் தம் படுக்கையில் வலப்பக்கத்தே வைத்துப் படுத்துறங்குவர் என்று ஆன்றோர் கூறும் வழக்கையும் ஈண்டு நினைவுபடுத்திக் கொள்வோமாக.

    சேக்கிழாரது கவிகள் மேலே காட்டிய சுவைபோல இனிக்கும் என்பதைப் பெரிய புராணத்துத் தொட்ட தொட்ட இடங்களில் காணலாம். சில உதாரணங்களை மட்டும் ஈண்டுக் காட்டி மேலே செல்வோம்.