பக்கம் எண் :

7

698

             சிறுபறைப் பருவம்

7.    அத்தி தருங்கவி என்மரும் நன்றா
           அறைகுதிர் அம்மட்டோ
       அவாவிய புத்தி தருங்கவி என்மரும்
           அதுமட் டோஇன்னும்
       சித்தி தருங்கவி என்மரும் எல்லாத்
           தீர்த்தங் களும்உறுமா
       செய்யாச் சுத்தி தருங்கவி என்மரும்
           செப்பிய அம்மட்டோ
       பத்தி தருங்கவி என்மரும் ஆகிப்
           பாரிற் புலவர்எலாம்
       பல்லா றோதுபு பாராட் டக்கதி
           பற்றிய பல்லோர்க்கும்
       முத்தி தருங்கவி பாடிய புலவன்
           முழக்குக சிறுபறையே
       முழுமணி மாடக் குன்றத் தூரன்
           முழக்குக சிறுபறையே

    [ அ. சொ. ]  அத்தி-உண்டு என்னும் பொருளது, அறை குதிர்-சொன்னீர், அத்திரும் கவி-ஆஸ்திகம் தரும் கவி,   உலகர்  உண்டு  என்று அறிவிக்கும் கவி, அதாவது-கடவுள் உண்டு, சீவான்மா உண்டு, மறுபிறவி உண்டு, நல் வினை, தீவினைப் பயன்கள் உண்டு என்று நிலை நிறுத்தும் பாடல்கள், பாரில்-உலகில், ஓதுபு-சொல்லி, புத்தி-ஞானம், அவாவிய-விரும்பிய, சித்தி-வேண்டியதை வேண்டியாங்கு பெறும் பேறு, பரலோக சித்தி, உறுமா-உறுமாறு, பல்லாறு-பல விதம், கதி-நற்கதி, பற்றிய-விரும்பிய.

    விளக்கம் : இக்கவியிலும் திரு பிள்ளையவர்கள் சேக்கிழாரின் செய்யுள் சிறப்பை விளக்கி உள்ளனர்.  சேக்கிழார் கவிகளில் எல்லார்க்கும் எவை எவை தேவை என்பது படுகிறதோ, அவை எல்லாம் உண்டு என்னும் முறையில் பெரிய புராணத்தில் கவிகள் அமைந்துள்ளன.