பக்கம் எண் :

744

             சிறுதேர்ப் பருவம்

இறைவனைப் போன்றவர் என்பதைச் சிவஞான போதம் “மாலற நேயம் மலிந்தவர் வேடமும், ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே” என்று கூறுதலால் அறியலாம்.  “சிவஞான சித்தியாரும், அங்கு அவர் திருவேடம் ஆலயங்கள் எல்லாம் அரன் எனவே தொழுது இறைஞ்சி” என்று அறிவிக்கிறது.  சிவப்பிரகாசமும்,

    தொண்டர்கள் இடத்தும் வானோர் தொழுந்திரு மேனி
                                            தானும்
    அண்டரும் கண்டிலாத அண்ணலே எனவ ணங்கி
    வெண்தர ளங்கள் சிந்த விழிமொழி குழறி மெய்யே
    கண்டுகொண் டிருப்பர் ஞானக் கடலமு தருந்தி னோரே

என்று கூறுகிறது.

    ஆகவே, சேக்கிழார் இறைவர்க்கு ஒப்பாவர் என்று பிள்ளை அவர்கள் கூறியது எல்லாப்படியாலும் ஏற்றதே.  ஒருவர் என்றது இறைவரையாகும்.  மண்தேர் பூமியில் ஊரும் தேராம்.  செய்யுளில் முதலடியில் மருவியவன் அனபாயச் சோழனே.  மன்னனும் தேர் ஊர்பவன், இறைவனும் தேர் ஊர்பவன், ஆதலின் இருவர் என்றனர்.

    ஆனால், ஈண்டு அரசனும் தேர் ஊர்பவனாயினும், அவனோடு சேக்கிழாரை ஒப்பாகக் கூறாமைக்குக் காரணம் துறவிக்கு வேந்தன் துரும்பு ஆதலின் என்க.

    ஊருணி என்பது கிணறு, குளம் என்ற இவற்றைக் குறிப்பிடும் சொல்லாகும்.  இக்குளம், இக்கிணறு ஒரு சமூகத் தார்க்கே உரியதானால் அதுபோது ஊருணி எனக் கூறப்பெறாது. இவை பொதுநீர் நிலையாக இருந்து ஊரார் யாவர்க்கும் பயன்படக்கூடியதாக இருந்தால்தான் ஊருணி என்னும் பெயரைப்பெறும். இக் கருத்தில்தான் நாயனாரும் இச்சொல்லை எடுத்து ஆண்டுள்ளனர்.

    ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
    பேரறி வாளன் திரு

என்ற குறட்பாவைக் காண்க.