திருநாளைப்போவார்123நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

பவசாகரந்தாண்டிச் சென்றாய்        உள்ளே
    பார்த்துணர்ந்துபர              மானந்தங்-கொண்டாய்
தவமாமுனி போலே               நின்றாய்-தில்லைத்
    தாண்டவராயனைக் கண்ணால்நீ கண்டாய். (நந்தா)

___________

வசனம்.

இப்படி வேதியர் சொல்லும்போது, நந்தனார் மனம் நொந்து கைகால் நடுங்கி
ஐயரைச் சுற்றிவந்து தலைவணங்கி எனக்கு அன்னங் கொடுத்து ஆடையளித்து
இத்தனைநாளுங் காப்பாற்றின பெரியவரே உங்களுக்கடிமைவேலை செய்யு மென்னை
இப்படிப் பெருமையாய்ச் சொல்லவேண்டா மென்று சொல்லுகின்றார்.

ராகம் - கல்யாணி ; தாளம் - ரூபகம்.

பல்லவி.

ஐயா சொல்லு         வேனே-உம
தடிமைப்பறையன்      தானே.

அனுபல்லவி.

மெய்யாகவேயிந்த மேதினிவாழ்        வோர்கள்
வேலைசெய்யூழியர் தம்மையோதாழ்   வார்கள். (ஐயா)

சரணங்கள்.

வேம்புக்குயர்ந்த மதுரங்கள்          பூட்டினும்
     வீறுமதன்குணம் மாறாதெந்       நாட்டினும்
ஆம்புத்திக்காரனென் னாலேயாவ     துண்டோ
     அய்யனருளையல் லாமலும்வே றுண்டோ (ஐயா)