திருநாளைப்போவார்70நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

வசனம்.

அந்தணர்சொன்னமொழியைப் புலையர்கள்கேட்டு மிகவுஞ் சந்தோஷங்கொண்டு
சேரிவந்துசேர்ந்தபின் நந்தனாரெப்போதும்போலே அந்தணரிடத்தில் வருகிறார்.

ராகம்-துக்கடா; தாளம்-ஆதி.

பல்லவி.

நந்தனாரும்வந்தார் வெகு
சொந்தமானதங்க - ளையரைக்காண. (நந்த)

சரணங்கள்.

அங்கமுழுதிலும்நீறுபூசியே அரகரசிவசிவவென்றுபேசியே
சங்கையாருந்திருக்கைகள்வீசியே சாமிசாமிஎன்றுதன்னையேசியே
தில்லைச்சிதம்பரப்பள்ளுபாடியே தரிசனங்காணேனென்றுவாடியே
அல்லலறுஞ்சிவலோகந்தேடியே அடையவேணுமென்றிங்கேநாடியே
                         (நந்தனாரும் வந்தார்)

விருத்தம்.

சாதிகுலம் பிறப்பென்னுஞ் சந்தேகந் தெரியாது தானாய் நிற்கும்
பேதகுணம் பற்றறுத்துப் பேரின்பம் வருஷித்துப் பேணிக் காக்கும்
ஆதிபரா பரமென்னுந் திருச்சிற்றம் பலத்தைக்கண் டானந்திக்க
வேதமொழி விளங்கிவருந்திருவாயால் விடைகொடுத்து விடுவீரென்றார்.

கண்ணிகள்.

ராகம்-உசேனி; தாளம் - ரூபகம்.

தில்லையம்பலத்தலமொன் றிருக்குதாம் - அதைக்கண்டபேர்க்கு
ஜனனமரணப் பிணியைக் கருக்குதாம்
உயர்ந்தசிகரக்கும்பந் தெரியுதாம் - அதை பார்த்தவர்க்கு
உள்ளங்குளிரக்கருணை புரியுதாம்