21 முதல் 30 வரை
 
21. கேட்டி லுறுதி கூட்டு முடைமை

(பதவுரை) கேட்டில் - (கைப்பொருள்) இழந்த காலத்தில், உறுதி - மனந்தளராமை, உடைமை - செல்வத்தை, கூட்டும் - சேர்க்கும்.

(பொழிப்புரை) பொருளை இழந்த காலத்தில் மனந்தளராமல் உறுதியுடனிருப்பது மீட்டும் செல்வத்தை யுண்டாக்கும்.

   
22. கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி

(பதவுரை) கைப்பொருள் தன்னின் - கையிலிருக்கிற பொருளைப் பார்க்கிலும், மெய்ப்பொருள் - மெய்ப்பொருளாவது, கல்வி - கல்வியேயாம்.

(பொழிப்புரை) கையிலிருக்கிற திரவியத்தைப் பார்க்கிலும் கல்வியே உண்மைப் பொருளாகும்

   
23. கொற்றவ னறித லுற்றிடத் துதவி

(பதவுரை) கொற்றவன் - அரசனானவன், அறிதல் - (ஒருவனை) அறிந்திருத்தல், உற்ற இடத்து - (அவனுக்கு ஆபத்து) வந்த இடத்து, உதவி - உதவியாகும்.

(பொழிப்புரை) ஒருவனுக்கு அரசன் அறிமுகமாயிருப்பது அவனுக்கு ஆபத்தில் உதவியாகும். (உற்றவிடத்து என்பது உற்றிடத்து என விகாரப்பட்டது.)

   
24. கோட்செவிக் குறளை காற்றுட னெருப்பு

(பதவுரை) கோட்செவி - கோள் கேட்குங் குணமுடையவனது காதிலே, குறளை - (பிறர்மேல் ஒருவன் வந்து சொன்ன) கோளானது, காற்றுடன் - காற்றுடன் சேர்ந்த, நெருப்பு - நெருப்பைப் போல மூளும்.

(பொழிப்புரை) கோள் கேட்கும் இயல்புள்ளவன் காதில் ஒருவன் சொன்ன கோள்வார்த்தை காற்றுடன் சேர்ந்த நெருப்புப்போல மூளும்.

   
25. கௌவை சொல்லி னெவ்வருக்கும் பகை

(பதவுரை) கௌவை - (பிறர்மேலே) பழிச்சொற்களை, சொல்லின் - (ஒருவன்) சொல்லினால், எவ்வருக்கும் - எல்லாருக்கும், பகை - (அவன்) பகையாவான்.

(பொழிப்புரை) ஒருவன் பிறர் பழிகளைச் சொல்லிக்கொண்டிருந்தால் அவன் யாருக்கும் பகையாவான் (எவருக்கும் என்பது எவ்வருக்கும் என விகாரப்பட்டது.)

   
26. சந்ததிக் கழகு வந்திசெய் யாமை

(பதவுரை) சந்ததிக்கு - தன் வமிசம் பெருகுதற்கு, அழகு - அழகாவது, வந்தி - மலடியாக, செய்யாமை - செய்யாமல் (தன் மனையாளோடு) கூடி வாழ்தலாம்.

(பொழிப்புரை) வமிசத்திற்கு அழகாவது மக்கட்பேறு உண்டாகும்படி மனைவியுடன் கூடி வாழ்தலாம்.

   
27. சான்றோ ரென்கை யீன்றோட் கழகு

(பதவுரை) சான்றோர் என்கை - (தன் புத்திரரைக் கல்வியறிவால்) நிறைந்தோர் என்று (பிறர்) சொல்லுகிறது, ஈன்றோட்கு - பெற்றவளுக்கு, அழகு - அழகாகும

(பொழிப்புரை) தன் புதல்வரை, அறிவுடையோர் என்று பிறர் சொல்லக் கேட்பது பெற்ற தாய்க்கு மகிழ்ச்சியாகும்.

   
28. சிவத்தைப் பேணிற் றவத்திற் கழகு

(பதவுரை) சிவத்தை - (முதற் கடவுளாகிய) பரமசிவத்தை, பேணின் - (ஒருவன்) வழிபட்டால், தவத்திற்கு - (அவன் செய்யும்) தவத்திற்கு, அழகு - அழகாகும்.

(பொழிப்புரை) ஒருவன் சிவபெருமானை விரும்பி வழிபட்டால் அதுவே அவன் தவத்திற்கு அழகாகும்.

   
29. சீரைத் தேடி னேரைத் தேடு

(பதவுரை) சீரை - சௌக்கியத்தை, தேடின் - (உனக்குத்) தேடுவாயானால், ஏரை - பயிரிடுந்தொழிலை, தேடு - தேடிக்கொள்ளு.

(பொழிப்புரை) சுகமாக வாழ விரும்பினால் உழுது பயிரிடுந் தொழிலைத் தேடிக்கொள்.

   
30. சுற்றத்திற் கழகு சூழ விருத்தல்

(பதவுரை) சுற்றத்திற்கு - உறவினருக்கு, அழகு - அழகாவது, சூழ இருத்தல் - சுற்றிலும் வந்திருத்தலாகும்.

(பொழிப்புரை) சுற்றத்தார்க்கு அழகாவது நலந்தீங்குகளில் சூழ வந்திருப்பதாகும்.