41 முதல் 50 வரை
 
41. துடியாப் பெண்டிர் மடியி னெருப்பு

(பதவுரை) துடியா - (தங் கணவனுக்குத் துன்பம் வந்தபோது) மனம் பதையாத, பெண்டிர் - பெண்கள், மடியில் - (அவர்) வயிற்றில், நெருப்பு - நெருப்பாவர்.

(பொழிப்புரை) கணவர்க்குத் துன்பம் வந்தபோது மனம் பதையாத மகளிர், அவர் வயிற்றில் நெருப்பாவர். (மடியில்நெருப்பு என்பதற்கு உடையிற் கட்டிய நெருப்பை யொப்பர்என்றும் பொருள் கூறலாம்.)

   
42. தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்

(பதவுரை) தூற்றும் - (தங் கணவர்மேற் குற்றஞ்சொல்லித்) தூற்றுகிற, பெண்டிர் - பெண்களை, கூற்று எனத்தகும் - (அவருக்கு) இயமன் என்று எண்ணத்தகும்.

(பொழிப்புரை) கணவர்மேல் அவதூறு சொல்லும் பெண்டிரை அவருக்கு இயமன் என்று சொல்லத்தகும்.

   
43. தெய்வஞ் சீறிற் கைதவ மாளும்.

(பதவுரை) தெய்வம் - தெய்வமானது, சீறின் - (ஒருவனைக்)கோபித்தால், கைதவம் - (அவனுக்குக்) கைகூடியிருந்ததவமும், மாளும் - (பயன் கொடாமல்) அழியும்.

(பொழிப்புரை) ஒருவன் கடவுளின் சினத்துக்கு ஆளானால்அவனுக்குக் கைகூடிய தவமும் அழிந்துவிடும். (கைத்தவம் என்பது கைதவம் என விகாரப்பட்டது.)

   
44. தேடா தழிக்கிற் பாடா முடியும்

(பதவுரை) தேடாது - (ஒருவன் வருந்திச்) சம்பாதியாமல்,அழிக்கின் - (இருக்கிற பொருளைச்) செலவழித்தால், பாடாமுடியும் - (அவனுக்குப் பின்) வருத்தமாக முடியும்.

(பொழிப்புரை) பொருளைச் சம்பாதியாமல் செலவழித்துக்கொண்டிருந்தால் பின்பு துன்பமாக முடியும்.

   
45. தையும் மாசியும் வையகத் துறங்கு

(பதவுரை) தையும் - தை மாதத்திலும், மாசியும் - மாசி மாதத்திலும், வை அகத்து - (பனிவருத்தந் தராத) வைக்கோல் வீட்டிலே, உறங்கு - நித்திரைபண்ணு.

(பொழிப்புரை) தை, மாசி மாதங்களாகிற பனிக்காலத்தில் வைக்கோலால் வேய்ந்த கூரைவீட்டில் நித்திரை செய்.(வை - வைக்கோல்.)

   
46. தொழுதூண் சுவையி னுழுதூ ணினிது

(பதவுரை) தொழுது - (ஒருவரைச்) சேவித்து, ஊண் - உண்ணும் உணவினது, சுவையின் - சுவையைப்பார்க்கிலும், உழுது - உழுது பயிர்செய்து, ஊண் - உண்ணும் உணவின் சுவை, இனிது - இன்பந்தருவதாகும்.

(பொழிப்புரை) சேவகஞ்செய்து உண்ணும் உணவைப் பார்க்கிலும் உழுது பயிர்செய்து உண்ணும் உணவு இன்பந் தருவதாகும்.

   
47. தோழ னோடு மேழைமை பேசேல்

(பதவுரை) தோழனோடும் - (உன்) சிநேகிதனோடாயினும், ஏழைமை - (உனக்கு இருக்கிற) சிறுமையை, பேசேல் - பேசாதே.

(பொழிப்புரை) உன் வறுமை முதலிய எளிமையை நண்பனிடத்திலும் சொல்லாதே.

   
48. நல்லிணக்க மல்ல தல்லற் படுத்தும்

(பதவுரை) நல் இணக்கம் அல்லது - நல்ல சகவாசம்அல்லாதது, அல்லல் - துன்பத்தையே, படுத்தும் - உண்டாக்கும்.

(பொழிப்புரை) நற்சேர்க்கையல்லாத கெட்ட சகவாசம் துன்பத்தை உண்டாக்கும்.

   
49. நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை

(பதவுரை) நாடு எங்கும் - தேசமெங்கும், வாழ - செழித்திருக்குமாயின், கேடு ஒன்றும் - ஒரு கெடுதியும், இல்லை - இல்லை.

(பொழிப்புரை) தேசமெங்கும் செழித்திருந்தால் யாருக்கும் ஒரு குறைவுமில்லை.

   
50. நிற்கக் கற்றல் சொற்றிறம் பாமை

(பதவுரை) நிற்க - நிலைபெறும்படி, கற்றல் - கற்றலாவது, சொல் - (தான் சொல்லும்) சொற்கள், திறம்பாமை - தப்பிப்போகாமையாம்.

(பொழிப்புரை) நிலைபெறக் கற்றலாவது சொல்லுஞ் சொல் தவறாமையாம். கற்றவர்கள் பயனின்றி யொழியாது நிலைபெறும் சொற்களைச் சொல்லுதல் வேண்டும். (சொல் திறம்பாமை என்பதற்கு வாக்குறுதியிற் பிறழாதிருத்தல் என்றும் பொருள் சொல்லலாம்.)