51 முதல் 60 வரை
 
51. நீரகம் பொருந்திய வூரகத் திரு

(பதவுரை) நீர் - நீர்வளமானது, அகம் - தனக்குள்ளேயே, பொருந்திய - அமைந்த, ஊரகத்து - ஊரினிடத்திலே, இரு - குடியிரு.

(பொழிப்புரை) நீர்வளம் பொருந்திய ஊரிலே குடியிரு.

   
52. நுண்ணிய கருமமு மெண்ணித் துணி

(பதவுரை) நுண்ணிய - சிறிய, கருமமும் - தொழிலையும், எண்ணி - (நன்றாக) ஆலோசித்து, துணி - (பின்பு அதைச்) செய்யத்துணி.

(பொழிப்புரை) சிறிய காரியத்தையும் நன்கு ஆலோசனை செய்து செய்யத்துணி.

   
53. நூன்முறை தெரிந்து சீலத் தொழுகு

(பதவுரை) நூல் - தருமநூலிலே சொல்லப்பட்ட, முறை - (விதிகளின்) முறையை, தெரிந்து - அறிந்து, சீலத்து - நல்லொழுக்க வழியில், ஒழுகு - நட.

(பொழிப்புரை) நீதிநூலிற் சொல்லப்பட்ட விதிகளை அறிந்து நல்லொழுக்க வழியில் நட.

   
54. நெஞ்சை யொளித்தொரு வஞ்சக மில்லை

(பதவுரை) நெஞ்சை - (தம்முடைய) மனசுக்கு, ஒளித்த - மறைக்கப்பட்ட, ஒரு வஞ்சகம் - யாதொரு வஞ்சனையும், இல்லை - இல்லை.

(பொழிப்புரை) மனத்திற்குத் தெரியாத வஞ்சகம் ஒன்றுமில்லை.

   
55. நேரா நோன்பு சீரா காது

(பதவுரை) நேரா - (மனசினால்) உடன்படாத, நோன்பு - தவமானது, சீர் ஆகாது - சீராக முடியாது.

(பொழிப்புரை) மனம்பொருந்திச் செய்யாத தவமானது செம்மையாக முடியாது

   
56. நைபவ ரெனினு நொய்ய வுரையேல்

(பதவுரை) நைபவர் எனினும் - (கேட்போர் எதிர்பேசாமல்)வருந்துவோராயினும், நொய்ய - அற்பவார்த்தைகளை, உரையேல் - சொல்லாதே.

(பொழிப்புரை) கேட்பவர் எதிர்பேசாமல் வருந்து வோராயினும் அற்பவார்த்தைகளைப் பேசாதே.

   
57. நொய்யவ ரென்பவர் வெய்யவ ராவர்

(பதவுரை) நொய்யவர் என்பவர் - (உருவத்தினாலே) சிறியவர் என்று இகழப்படுவோரும், வெய்யவர் ஆவர் - (செய்காரியத்தால் யாவரும்) விரும்பும் குணத்தை யுடையவராவர்.

(பொழிப்புரை) உருவம் முதலியவற்றால் சிறியவரென்று இகழப்படுவோருஞ் செய்யுங் காரியத்தால் யாவரும் விரும்புந்தன்மையினர் ஆவர்.

   
58. நோன்பென் பதுவே கொன்று தின்னாமை

(பதவுரை) நோன்பு என்பது - தவமென்று சொல்லப்படுவது, கொன்று - (ஒரு சீவனைக்) கொலை செய்து, தின்னாமையே - (அதன் மாமிசத்தைத்) தின்னாமையேயாம்.

(பொழிப்புரை) விரதம் என்று சொல்லப்படுவது ஓருயிரைக் கொன்று அதன் ஊனைத் தின்னாமையாம்.

   
59. பண்ணிய பயிரிற் புண்ணியம் தெரியும்

(பதவுரை) பண்ணிய - (ஒருவன்) செய்த, பயிரின் - பயிரின் விளைவினாலும் விளைவில்லாமையினாலும், புண்ணியம் - (அவனிடத்தே) புண்ணியம் இருத்தலும் இல்லாமையும், தெரியும் - அறியப்படும்.

(பொழிப்புரை) ஒருவன் செய்த பயிர் விளைவதிலிருந்து அவன் முன்பு செய்த புண்ணியம் அறிந்து கொள்ளப்படும்.

   
60. பாலோ டாயினுங் கால மறிந்துண்

(பதவுரை) பாலோடு ஆயினும் - பாலோடு கூடிய அன்னத்தை உண்டாலும், காலம் அறிந்து - (உண்ணத்தகுங்) காலத்தை அறிந்து, உண் - (அதை) உண்ணு.

(பொழிப்புரை) பாலுடன் கூடிய அன்னமாயினும் உண்ணத்தகும் காலமறிந்து உண்.