முன் பக்கம் |
முகப்பு |
தேடுதல் |
61 முதல் 70 வரை
|
|
61. பிறன்மனை புகாமை யறமெனத்
தகும் |
(பதவுரை) பிறன் - பிறனுடைய,
மனை - மனையாளிடத்தில், புகாமை -
(இச்சித்துப்) போகாமையே, அறம் எனத் தகும் - (எல்லாத்
தருமங்களிலும் உயர்ந்த) தருமம் என்று சொல்லத்தகும்.
(பொழிப்புரை) பிறன்மனைவியை விரும்பாமையே
உயர்ந்த தருமம் என்று
சொல்லத்தகும். |
|
|
|
|
62. பீரம் பேணி பாரந்
தாங்கும் |
(பதவுரை) பீரம்பேணி - தாய்ப்பால் குறைவற உண்டு
வளர்ந்தவன், பாரம் - பாரமான சுமையை,
தாங்கும் - சுமப்பான்.
(பொழிப்புரை) தாய்ப்பாலைக்குறைவற உண்டு
வளர்ந்தவன் பெரும் பாரத்தைச் சுமக்க வல்லவனாவான். (காரணத்தைக் குறைவறக்
கொண்டவன் காரியத்தை எளிதில் முடிப்பான்.) (பீரம் என்பதில் அம்
சாரியை.) |
|
|
|
|
63. புலையுங் கொலையும் களவுந்
தவிர் |
(பதவுரை) புலையுயம் - புலாலுண்ணுதலையும்,
கொலையும் - சீவ வதை செய்வதையும், களவும் -
பிறர்பொருளைத் திருடுதலையும்., தவிர் - (செய்யாது)
ஒழித்துவிடு.
(பொழிப்புரை) புலால் உண்ணுதலும்,
பிறவுயிரைக்கொல்லுதலும், பிறர்பொருளைத் திருடுதலும்,
செய்யாதே. |
|
|
|
|
64. பூரியோர்க் கில்லை சீரிய
வொழுக்கம் |
(பதவுரை) பூரியோர்க்கு - கீழ்மக்களுக்கு,
சீரிய - சிறப்பாகிய, ஒழுக்கம் - நடையானது,
இல்லை - இல்லை.
(பொழிப்புரை) கீழ்மக்களிடத்தில் சிறந்த நடை
காணப்படுவதில்லை. |
|
|
|
|
65. பெற்றோர்க் கில்லை சுற்றமுஞ்
சினமும் |
(பதவுரை) பெற்றோர்க்கு - (மெய்ஞ்ஞானத்தைப்)
பெற்றவர்க்கு, சுற்றமும் - உறவினர்மேல் ஆசையும்,
சினமும் - (மற்றவர்மேல்) வெறுப்பும், இல்லை -
இல்லை.
(பொழிப்புரை) கடவுளருளைப் பெற்றோர்க்கு
உறவுமில்லை கோபமும் இல்லை. |
|
|
|
|
66. பேதைமை யென்பது மாதர்க்
கணிகலம் |
(பதவுரை) பேதைமை என்பது - அறியாமை யென்று
சொல்லப்படுங் குணமானது, மாதர்க்கு - பெண்களுக்கு,
அணிகலம் - ஆபரணமாகும்.
(பொழிப்புரை) அறிந்தும் அறியாதவர்போல
அடங்கியிருக்கும் குணம் மாதர்களுக்கு
ஆபரணமாகும். |
|
|
|
|
67. பையச் சென்றால் வையந்
தாங்கும் |
(பதவுரை) பைய - மெள்ள,
சென்றால் - (ஒருவன்தகுதியான வழியிலே) நடந்தால்,
வையம் - பூமியிலுள்ளோர், தாங்கும் - (அவனை)
மேலாகக் கொள்வர்.
(பொழிப்புரை) ஒருவன் தகுதியான வழியில் நடந்தால்
உலகத்தார் அவனை மேலாகக்
கொள்வர். |
|
|
|
|
68. பொல்லாங் கென்பவை யெல்லாந்
தவிர் |
(பதவுரை) பொல்லாங்கு என்பவை - தீங்குகளென்று
சொல்லப்பட்டவை, எல்லாம் - எல்லாவற்றையும்,
தவிர் - (செய்யாது) ஒழித்துவிடு.
(பொழிப்புரை) தீங்குகள் என்று சொல்லப்பட்ட
யாவற்றையும் செய்யாதொழி. |
|
|
|
|
69. போனக மென்பது தானுழந்
துண்டல் |
(பதவுரை) போனகம் என்பது - போசனமென்று
சொல்லப்படுவது, தான் உழந்து - தான் பிரயாசைப்பட்டுச்
சம்பாதித்து, உண்டல் - உண்ணுதலாம்.
(பொழிப்புரை) உணவென்று சிறப்பித்துச்
சொல்லப்படுவது தான் வருந்திச் சம்பாதித்து
உண்பதாம். |
|
|
|
|
70. மருந்தே யாயினும் விருந்தோ
டுண் |
(பதவுரை) மருந்தே ஆயினும் - (உண்ணப்படுவது
கிடைத்தற்கு அரிய) தேவாமிர்தமேயானாலும், விருந்தோடு - வந்த
விருந்தாளிகளோடு கூடி, உண் - உண்ணு.
(பொழிப்புரை) கிடைத்தற்கரிய தேவாமிர்தமே
யானாலும் விருந்தினரோடு புசி. |
|
|
|
|