71 முதல் 80 வரை
 
71. மாரி யல்லது காரிய மில்லை

(பதவுரை) மாரி அல்லது - மழையினால் அல்லாமல், காரியம் - யாதொரு காரியமும், இல்லை - (யாருக்கும்நடப்பது) இல்லை.

(பொழிப்புரை) மழை யிருந்தாலல்லாமல் உலகத்தில் எக்காரியமும் நடப்பதில்லை.

   
72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை

(பதவுரை) மின்னுக்கு எல்லாம் - (வானத்திலே காணப்பட்ட) மின்னலுக்கு எல்லாம், பின்னுக்கு மழை - பின்னே மழை உண்டாகும்.

(பொழிப்புரை) மின்னுவதெல்லாம் பின்னே மழை பெய்தற்கு அடையாளம். (ஒருவனுடைய ஊக்கம் முதலியவெல்லாம் அவனுக்குப் பின்னே வரும் நன்மைக்கு அடையாளம்.)

   
73. மீகாம னில்லா மரக்கல மோடாது

(பதவுரை) மீகாமன் - (தன்னை ஓட்டத்தக்க) மாலுமி, இல்லா - இல்லாத, மரக்கலம் - கப்பல், ஓடாது - (கடலிலே செவ்வையாக) ஓடாது.

(பொழிப்புரை) மாலுமி யில்லாத கப்பல் ஓடாது. (நல்வழியில் நடத்தும் தலைவனில்லாத குடும்பமும், வேந்தனில்லாத நாடும் முதலியன செவ்வையாக நடைபெறமாட்டா.)

   
74. முற்பகல் செய்யிற் பிற்பகல் விளையும்

(பதவுரை) முற்பகல் - ஒரு பகலின் முன்பங்கிலே, செய்யின் - (பிறனுக்குத் தீங்கு) செய்தால், பிற்பகல்- அதன் பின்பங்கிலே, விளையும் - (செய்தவனுக்கு) அத்தீங்கு தானே உண்டாகும்.

(பொழிப்புரை) ஒரு பகலின் முற்பாகத்தில் பிறருக்குத் தீங்கு செய்தால் பிற்பாகத்தில் தனக்கு அத்தீங்கு உண்டாகும். (முற்பகல் பிற்பகல் என்று சொன்னது விரைவில் உண்டாகும் என்பதைக் காட்டுதற்கு. நன்மை தீமை இரண்டுக்கும் பொதுவாகச் சொன்னதாகவும் கொள்ளலாம்.)

   
75. மூத்தோர் சொன்ன வார்த்தை யமிர்தம்

(பதவுரை) மூத்தோர் - (கல்வியறிவினாலே) முதிர்ந்தவர், சொன்ன - சொல்லிய, வார்த்தை - வார்த்தையானது, அமிர்தம் - தேவாமிர்தத்தைப் போலும்.

(பொழிப்புரை) பெரியோர் சொல்லிய வார்த்தையானது தேவாமிர்தம்போல் இன்பத்தைச் செய்யும்.

   
76. மெத்தையிற் படுத்த னித்திரைக் கழகு

(பதவுரை) மெத்தையில் - பஞ்சணையிலே, படுத்தல் - படுத்தலானது, நித்திரைக்கு - (ஒருவன் செய்கிற) நித்திரைக்கு, அழகு - அழகாகும்.

(பொழிப்புரை) மிருதுவான பஞ்சணையிற் படுத்தல் நித்திரைக்கு அழகாகும். (மெத்தெனப்படுத்தல் என்றும் பாடம்.)

   
77. மேழிச் செல்வம் கோழை படாது

(பதவுரை) மேழி - கலப்பைபிடித்து உழுது பயிர் செய்தலால் உண்டாகின்ற, செல்வம் - செல்வமானது, கோழை படாது - (ஒருபோதும்) குறைவை அடையாது.

(பொழிப்புரை) உழுது பயிர்செய்தலால் வரும் செல்வம் சிறுமையுறாது.

   
78. மைவிழி யார்தம் மனையகன் றொழுகு

(பதவுரை) மை விழியார் தம் - மை தீட்டிய கண்களையுடைய வேசிகளது, மனை - வீட்டினை, அகன்று ஒழுகு - விலகி நட.

(பொழிப்புரை) மைதீட்டிய கண்களையுடைய பரத்தையர் மனையை அணுகாமல் விலகிநட.

   
79. மொழிவது மறுக்கி னழிவது கருமம்

(பதவுரை) மொழிவது - (பெரியோர்) சொல்வதை, மறுக்கின் - கேளாமற் செய்தால், கருமம் - (ஒருவன் செய்யுந்) தொழில், அழிவது - கெடுவதாகும்.

(பொழிப்புரை) ஒருவன் பெரியோர் சொல்லை மீறி நடந்தால் அவன் செய்யும் தொழில் பயன்படாது அழியும்.

   
80. மோன மென்பது ஞான வரம்பு

(பதவுரை) மோனம் என்பது - மௌனநிலை என்பது, ஞானம் - மெய்ஞ்ஞானத்துக்கு, வரம்பு - எல்லையாகும்.

(பொழிப்புரை) மௌனம் என்பது ஞானத்திற்கு எல்லையாம்.