1 முதல் 10 வரை
 
கடவுள் வாழ்த்து


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு.

(பதவுரை) துப்பு ஆர் - பவளம் போலும் (சிவப்பாகிய), திருமேனி - திருமேனியையும், தும்பிக்கையான் - துதிக்கையையும் உடைய விநாயகக் கடவுளின், பாதம் - திருவடிகளை, பூக்கொண்டு - (அருச்சிக்க) மலர் எடுத்துக்கொண்டு,தப்பாமல் - நாடோறும் தவறாமல், சார்வார் தமக்கு - அடைந்துபூசை செய்வோருக்கு, வாக்கு உண்டாம் - சொல்வளம் உண்டாகும்; நல்ல மனம் உண்டாம் - நல்ல சிந்தனை உண்டாகும்; மாமலராள் - பெருமை பொருந்திய செந்தாமரைப்பூவில் இருக்கும் இலக்குமியின், நோக்கு உண்டாம் - அருட்பார்வை உண்டாகும்; மேனி - அவர் உடம்பு, நுடங்காது -(பிணிகளால்) வாட்டமுறாது.

விநாயகக் கடவுளின் திருவடிகளைப் பூசிப்பவர்க்குக் கல்வியும், செல்வமும், நலமும் உண்டாகும்.

   
பயன் கருதாது அறஞ்செய்க


1  நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
   என்று தருங்கொ லெனவேண்டா-நின்று
   தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
   தலையாலே தான்தருத லால்.

(பதவுரை) நின்று - நிலைபெற்று, தளரா - சோராமல், வளர் - வளர்கின்ற, தெங்கு - தென்னையானது, தாள் உண்ட நீரை - தன் அடியால் உண்ட தண்ணீரை, தலையாலே - தன் முடியாலே, தான் தருதலால் - (சுவையுள்ள இளநீராக்கித்) தானே தருதலால், ஒருவற்கு -(நற்குணமுடைய) ஒருவனுக்கு, நன்றி செய்தக்கால் - உதவி செய்தால், அந்நன்றி - அவ்வுதவியை, என்று தருங்கொல் - அவன் எப்பொழுது செய்வானோ, என வேண்டா - என்று ஐயுற வேண்டுவதில்லை.

நற்குணமுடையவனுக்கு உதவி செய்தால், அவனுஞ் சிறந்த உதவியை வணக்கத்தோடு விரைந்து செய்வான் என்பதாம். (1)

   
நல்லவர்க்குச் செய்த உதவி


2  நல்லா ரொருவர்க்குச் செய்த உபகாரம்
   கல்மே லெழுத்துப்போற் காணுமே-அல்லாத
   ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்
   நீர்மே லெழுத்திற்கு நேர்.

(பதவுரை) நல்லார் ஒருவர்க்கு - நற்குணமுடைய ஒருவர்க்கு, செய்த உபகாரம் - செய்த உதவியானது, கல்மேல் எழுத்துப்போல் - கருங்கல்லின்மேல் வெட்டப்பட்ட எழுத்தைப் போல, காணும் - அழியாது விளங்கும்; அல்லாத - நல்ல வரல்லாத, ஈரம் இலா நெஞ்சத்தார்க்கு - அன்பில்லாத மனமுடையார்க்கு, ஈந்த உபகாரம் - செய்த உதவியானது, நீர்மேல் எழுத்திற்கு - நீரின்மேல் எழுதப்பட்ட எழுத்திற்கு, நேர் - ஒப்பாக (அழிந்துவிடும்).

நல்லவருக்குச் செய்த உபகாரம் என்றும் நிலைபெற்று விளங்கும்; தீயவருக்குச் செய்த உபகாரம் செய்த அப்பொழுதே அழிந்துவிடும் எ - ம் (2)

   
இளமையில் வறுமை


3.  இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
   இன்னா அளவி லினியவும்-இன்னாத
   நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே
   ஆளில்லா மங்கைக் கழகு.

(பதவுரை) இளமை - (இன்பத்தைத் தரும்) இளமைப் பருவத்தில், வறுமை வந்து எய்தியக்கால் - வறுமை வந்து அடைந்தால், இன்னா - அது துன்பத்தைத் தருவதாகும், இன்னா அளவில் - துன்பத்தைத் தரும் முதுமைப் பருவத்தில், இனியவும் - இனியனவாகிய பொருள்களும், இன்னாத - துன்பத்தைத் தருவனவாம்; (அவை) நாள் அல்லா நாள் (சூடுதற்குரிய) காலமல்லாத காலத்தில், பூத்த நல்மலரும் - மலர்ந்த நல்ல மலரையும், ஆள் இல்லா மங்கைக்கு அழகும் - (அனுபவித்தற்குக்) கணவன் இல்லாத மங்கையின் அழகையும், போலும் - ஒக்கும்.

ஏ: அசை. அழகும் என்பதில் உம்மை தொக்கது.வறுமைக் காலத்து இளமையும், முதுமைக் காலத்துச் செல்வமும் துன்பம் விளைவிப்பன எ - ம். (3)

   
மேன்மக்கள் இயல்பு


4.  அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்
   நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
   கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
   சுட்டாலும் வெண்மை தரும்.

(பதவுரை) பால் - பாலினை, அட்டாலும் - காய்ச்சினாலும், சுவையிற் குன்றாது - அஃது இனிய சுவையிற் குறையாது; சங்கு - சங்கினை, சுட்டாலும் - சுட்டு நீறாக்கினாலும், வெண்மை தரும் - அது வெண்ணிறத்தையே கொடுக்கும் (அவைபோல), மேன் மக்கள் - மேலோர், கெட்டாலும் - வறுமையுற்றாலும், மேன் மக்களே - மேலோராகவே விளங்குவர்; நண்பு அல்லார் - நட்பின் குணமில்லாத கீழோர், அளவளாய் நட்டாலும் - கலந்து நட்புச் செய்தாலும், நண்பு அல்லர் - நண்பராகார்.

பால் சங்கு என்னும் இரண்டும் மேன்மக்களுக்கு உவமைகளாக வந்தன. மேலோர் வறுமையுற்றபொழுது முன்னையினும் சிறந்து விளங்குவரென்பது உவமைகளாற் புலனாகின்றது. ஏ: தேற்றப் பொருட்டு.

மேலோர் வறுமையுற்றாலும் மேலோரே; கீழோர் கலந்து பழகினாலும் நண்பராகார் எ - ம். (4)

   
காலமறிந்து நடத்தல்


5.  அடுத்து முயன்றாலு மாகுநா ளன்றி
   எடுத்த கருமங்க ளாகா-தொடுத்த
   உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம்
   பருவத்தா லன்றிப் பழா.

(பதவுரை) தொடுத்த - கிளைத்த, உருவத்தால் நீண்ட - வடிவத்தால் நீண்ட, உயர் மரங்கள் எல்லாம் - உயர்ந்த மரங்களெல்லாம், பருவத்தால் அன்றி - பழுக்குங்காலம் வந்தாலல்லாமல், பழா - பழுக்கமாட்டவாம்; (அதுபோல) அடுத்து முயன்றாலும் - அடுத்தடுத்து முயற்சி செய்தாலும், ஆகுநாள் அன்றி - முடியுங்காலம் வந்தால் அல்லாமல், எடுத்த கருமங்கள் - மேற்கொண்ட காரியங்கள்; ஆகா - முடியாவாம்.

எந்தச் செயலும் முடியுங் காலத்திலேதான் முடியும்; ஆகையால் அக்காலம் அறிந்து தொடங்க வேண்டும் எ-ம். (5)

   
மானம் இழந்து வாழாமை


6  உற்ற இடத்தில் உயிர்வழங்குந் தன்மையோர்
   பற்றலரைக் கண்டாற் பணிவரோ-கற்றூண்
   பிளந்திறுவ தல்லால் பெரும்பாரந் தாங்கின்
   தளர்ந்து வளையுமோ தான்.

(பதவுரை) கல் தூண் - கருங்கற் கம்பமானது, பெரும்பாரம் தாங்கின் - பெரிய பாரத்தைச் சுமந்தால், பிளந்து இறுவது அல்லால் - பிளந்து முறிவதல்லாமல், தான் தளர்ந்து வளையுமோ - தான் தளர்வுற்று வளையுமோ (வளையாது; அது போல), உற்ற இடத்தில் - மானக்கேடு உண்டானவிடத்தில், உயிர் வழங்கும் தன்மையோர் - தம் உயிரைவிடும் குணமுடையோர், பற்றலரை - பகைவரை, கண்டால் - பார்த்தால், பணிவரோ - வணங்குவரோ? (வணங்கார்).ஓ இரண்டும் எதிர்மறை.

மானமுடையவர் ஆபத்து வந்தபோது உயிரை விடினும் விடுவரேயன்றி மானத்தை விடார் எ - ம். (6)

   
அறிவு செல்வம் குணம்


7  நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
   நூலளவே யாகுமாம் நுண்ணறிவு-மேலைத்
   தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம்
   குலத்தளவே யாகுங் குணம்.

(பதவுரை) நீர் ஆம்பல் - நீரிலுள்ள அல்லியானது, நீர் அளவே ஆகும் - நீரினது உயரத்தின் அளவாகவே இருக்கும்; (அதுபோல) நுண் அறிவு - கூரிய அறிவானது, தான் கற்ற - தான் படித்த, நூல் அளவே ஆகும் - நூல்களின் அளவாகவே இருக்கும்; தான் பெற்ற செல்வம் - தான் அடைந்த செல்வமானது, மேலை-முற்பிறப்பிற் செய்த, தவத்து அளவே ஆகும்-தவத்தின் அளவாகவே இருக்கும்; குணம் - குணமானது, குலத்து அளவே ஆகும் - (தான் பிறந்த) குடியின் அளவாகவே இருக்கும்.

ஆம் மூன்றும் அசை நிலை.

ஒருவருக்கு அறிவு நூலினளவாகவும், செல்வம் தவத்தினளவாகவும், குணம் குலத்தினளவாகவும் இருக்கும் எ - ம். (7)

   
நல்லார் தொடர்பின் நலம்


8.  நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
   நல்லார்சொற் கேட்பதுவும் நன்றேஎ-நல்லார்
   குணங்க ளுரைப்பதுவும் நன்றே அவரோ
   டிணங்கி யிருப்பதுவும் நன்று.

(பதவுரை) நல்லாரை - நற்குணமுடையோரை, காண்பதுவும் - பார்ப்பதும், நன்றே - நல்லதே; நல்லார் - நல்லவருடைய, நலம் மிக்க - பயன் நிறைந்த, சொல் - சொல்லை, கேட்பதுவும் - கேட்டலும், நன்றே - நல்லதே; நல்லார் - நல்லவருடைய, குணங்கள் - நற்குணங்களை, உரைப்பதுவும் - பேசுதலும், நன்றே - நல்லதே, அவரோடு - அந் நல்லவருடன், இணங்கி இருப்பதுவும் - கூடியிருத்தலும், நன்று - நல்லதே.

ஏ மூன்றும் தேற்றம்.

நல்லவரைக் காணினும், அவர் சொல்லைக் கேட்பினும், அவர் குணங்களைப் பேசினும், அவரோடு கூடியிருப்பினும் நல்லறிவும் நல்லொழுக்கமும் உண்டாகும் எ - ம். (8)

   
தீயார் தொடர்பின் தீமை


9.  தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
   தீயார்சொற் கேட்பதுவுந் தீதேஎ-தீயார்
   குணங்க ளுரைப்பதுவுந் தீதே அவரோ
   டிணங்கி யிருப்பதுவுந் தீது.

(பதவுரை) தீயாரை - தீக்குணம் உடையவரை, காண்பதுவும் - பார்ப்பதும், தீதே - தீயதே; தீயார் - தீயவருடைய, திருஅற்ற - பயன் இல்லாத, சொல் - சொல்லை, கேட்பதுவும் - கேட்டலும், தீதே - தீயதே; தீயார் - தீயவருடைய, குணங்கள் - தீய குணங்களை, உரைப்பதுவும் - பேசுதலும், தீதே - தீயதே; அவரோடு - அத் தீயவருடன், இணங்கி இருப்பதுவும் - கூடியிருத்தலும், தீதே - தீயதே.

ஏ மூன்றும் தேற்றம்.

தீயாரைக் காணினும், அவர் சொல்லைக் கேட்பினும் அவர் குணங்களைப் பேசினும், அவரோடு கூடியிருப்பினும் தீயறிவும் தீயொழுக்கமும் உண்டாகும் எ - ம். (9)

   
நல்லாரால் எல்லார்க்கும் நலம்


10.  நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
    புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
    நல்லா ரொருவர் உளரேல் அவர்பொருட்
    டெல்லார்க்கும் பெய்யு மழை.

(பதவுரை) நெல்லுக்கு - நெற்பயிருக்கு, இறைத்த நீர் - இறைக்கப்பட்ட தண்ணீரானது, வாய்க்கால் வழி ஓடி - கால்வாய் வழியாகச் சென்று, ஆங்கு - அவ்விடத்திலுள்ள புல்லுக்கும் பொசியும் - புல்லுகளுக்கும் கசிந்தூறும்; (அதுபோல), தொல் உலகில் - பழைமையாகிய இவ்வுலகத்தில், நல்லார் ஒருவர் உளரேல் - நல்லவர் ஒருவர் இருப்பாராயின், அவர் பொருட்டு - அவர் நிமித்தமாக, எல்லார்க்கும் மழை பெய்யும் - அனைவருக்கும் மழை பெய்யா நிற்கும்.

ஏ, ஆம் இரண்டும் அசை.நல்லோரைச் சேர்ந்த எல்லோரும் பயனடைவர் எ-ம். (10)