1 முதல் 10 வரை
|
|
-
பாலுந் தெளிதேனும் பாகும்
பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன்-கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத்
தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா.
(பதவுரை) கோலம் செய் - அழகினைச் செய்கின்ற,
துங்கம் - உயாவாகிய, கரிமுகத்து - யானை
முகத்தையுடைய, தூமணியே-பரிசுத்தமாகிய மாணிக்கம்போலும் விநாயகக்
கடவுளே, பாலுந் தெளி தேனும் பாகும் பருப்பும்- ஆவின் பாலும்
தெளிந்த தேனும் வெல்லப்பாகும் பருப்பும்ஆகிய, இவை நாலும்
கலந்து-இந்நான்கையும் கலந்து, நான்உனக்குத் தருவேன் -
அடியேன் தேவரீருக்கு நிவேதிப்பேன்;சங்கத் தமிழ் மூன்றும் -
சங்கத்தில் வளர்க்கப்பட்ட முத்தமிழையும், நீ எனக்குத் தா -
தேவரீர் அடியேனுக்குத் தந்தருள்வீராக.
இதன் கருத்து :-
விநாயகக் கடவுளே! தேவரீர்அடியேனது பூசையை ஏற்றுக்கொண்டு எனக்கு முத்தமிழ்ப்புலமையும்
தந்தருளவேண்டும் என்பதாம். முத்தமிழ் - இயல், இசை, நாடகம் என்னும்
பிரிவினையுடையதமிழ். தமிழ் முதல்,இடை, கடை யென்னும் முச்சங்கங்களால் வளர்க்கப்
பெற்றமையால் சங்கத் தமிழ் எனப் பெயர்
பெறுவதாயிற்று. |
|
|
|
|
-
1. புண்ணியம்ஆம்
பாவம்போம் போனநாட் செய்தஅவை
மண்ணில் பிறந்தார்க்கு
வைத்தபொருள்-எண்ணுங்கால் ஈதொழிய வேறில்லை எச்சமயத்
தோர்சொல்லுந் தீதொழிய நன்மை
செயல்.
(பதவுரை) புண்ணியம் ஆம் -
அறமானது விருத்தியைச் செய்யும்; பாவம் போம் - பாவமானது
அழிவினைச்செய்யும்; போனநாள் செய்த அவை - முற்பிறப்பிற் செய்த
அப் புண்ணிய பாவங்களே, மண்ணில் பிறந்தார்க்கு - பூமியிலே
பிறந்த மனிதர்களுக்கு, வைத்த பொருள் - (இப்பிறப்பிலே
இன்பதுன்பங்களை அநுபவிக்கும்படி) வைத்த பொருளாகும்; எண்ணுங்கால் -
ஆராய்ந்து பார்க்கின், எச்சமயத்தோர் சொல்லும் - எந்த
மதத்தினர் சொல்லுவதும், ஈது ஒழிய வேறு இல்லை - இதுவன்றி
வேறில்லை; (ஆகையால்) தீது ஒழிய நன்மை செயல் - பாவஞ் செய்யாது
புண்ணியமே செய்க.
புண்ணியத்தால் இன்பமும், பாவத்தால்
துன்பமும் உண்டாதலால், பாவத்தை யொழித்துப் புண்ணியத்தைச் செய்க எ-ம். ஆக்கும்
போக்கும் என்பன ஆம் போம் என நின்றன.
(1) |
|
|
|
|
-
2. சாதி யிரண்டொழிய
வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா
நெறிமுறையின்-மேதினியில் இட்டார் பெரியோர் இடாதார்
இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள
படி.
(பதவுரை) சாற்றுங்கால் -
சொல்லுமிடத்து, மேதினியில் - பூமியில், சாதி இரண்டு
ஒழிய வேறு இல்லை - இரண்டு சாதியின்றி வேறில்லை, (அவ்விரண்டு சாதியாரும்
யாவரெனின்) நீதி வழுவா நெறி - நீதி தவறாத நல்வழியில் நின்று,
முறையின் - முறையோடு; இட்டார் - (வறியர்
முதலானவர்க்கு) ஈந்தவரே, பெரியோர்-உயர்வாகிய சாதியார்;
இடாதார் - ஈயாதவரே, இழிகுலத்தார் -
இழிவாகிய சாதியார்; பட்டாங்கில் உள்ளபடி-உண்மை நூலில் உள்ள
இயற்கை இதுவேயாம்.
கொடுத்தவர் உயர்குலத்தினர்; கொடாதவர்
இழிகுலத்தினர்; இவ்வகையன்றி வேறு சாதியில்லை எ - ம்.
(2) |
|
|
|
|
-
3. இடும்பைக்கு இடும்பை
இயலுடம்பி தன்றே
இடும்பொய்யை மெய்யென்
றிராதே-இடுங்கடுக உண்டாயி னுண்டாகும் ஊழிற்
பெருவலிநோய் விண்டாரைக் கொண்டாடும்
வீடு.
(பதவுரை) இயல் உடம்பு இது -
பொருந்திய இவ்வுடம்பானது, இடும்பைக்கு - துன்பமாகிய சரக்குகட்கு,
இடும்பை அன்றே - இட்டு வைக்கும் பை யல்லவா, இடும்
பொய்யை - (உணவினை) இடுகின்ற நிலையில்லாத இவ்வுடம்பை, மெய்
என்று இராது-நிலையுடையதென்று கருதியிராமல், கடுக -
விரையில், இடும் - வறியார்க்கு ஈயுங்கள்,
உண்டாயின் - (இவ்வறம் உங்களிடத்து) உண்டாயின்,
பெருவலிநோய் - மிக்க வலிமையுடைய பாசமாகிய பிணியினின்றும்,
விண்டாரை - நீங்கியவரை, கொண்டாடும் -
விரும்புகின்ற, வீடு-முத்தியானது, ஊழின் -
முறையாலே, உண்டாகும் - உங்கட்குக் கிடைக்கும்.
அறஞ் செய்தவர்க்கு முறையாலே
வீடுபேறுண்டாகும், எ-ம். நீரிலெழுத்துப்போற் கணத்துள் அழிவதாகலின் உடம்பு பொய்
எனப்பட்டது. உடம்பிற்கு மெய் என்று பெயர் வந்தது எதிர் மறை யிலக்கணை. பயன் கருதாது
செய்யும் அறத்தால் மனத்தூய்மையும், மெய்யுணர்வும், வீடுபேறும் முறையானே உண்டாகும்
என்க. (3) |
|
|
|
|
-
4. எண்ணி ஒருகருமம்
யார்க்குஞ்செய் யொண்ணாது
புண்ணியம் வந்தெய்து
போதல்லாற்-கண்ணில்லான் மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோ
லொக்குமே ஆங்கால மாகு மவர்க்கு.
(பதவுரை) யார்க்கும் -
எத்தன்மையோர்க்கும், புண்ணியம் வந்து எய்துபோது அல்லால் -
(முன்செய்த) புண்ணியம் வந்து கூடும்பொழுதல்லாமல், ஒரு கருமம்-ஒரு
-காரியத்தை, எண்ணி-ஆலோசித்து, செய்யொண்ணாது
- செய்து முடிக்க இயலாது; (அப்படிச் செய்யின் அது) கண்
இல்லான்-குருடன், மாங்காய் விழ - மாங்காயை
விழுவித்தற்கு, எறிந்த மாத்திரைக்கோல் ஒக்கும் - எறிந்த
மாத்திரைக்கோலைப் போலும்; ஆம் காலம் - புண்ணியம் வந்து கூடும்
பொழுது, அவர்க்கு ஆகும் - அவர்க்கு அக்காரியம் எளிதில்
முடியும்.
புண்ணிய மில்லாதவன் செய்யத் தொடங்கிய
காரியம் முடியப் பெறாது கைப்பொருளும் இழப்பன் எ-ம். மாத்திரை-அளவு. குருடன்
மாங்காயும் பெறாது கோலும் இழப்பன் என்க.
(4) |
|
|
|
|
-
5. வருந்தி அழைத்தாலும் வாராத
வாரா
பொருந்துவன போமினென்றாற்
போகா-இருந்தேங்கி நெஞ்சம்புண் ணாக நெடுந்தூரந்
தாம்நினைந்து துஞ்சுவதே மாந்தர்
தொழில்.
(பதவுரை) வாராத-(ஊழால்)
வரக்கூடாதவைகள், வருந்தி அழைத்தாலும் - பரிந்து அழைப்பினும்,
வாரா - வாராவாம்; பொருந்துவன - (ஊழால்)
வரக்கூடியவை, போமின் என்றால் - போயிடுங்கள் என வெறுப்பினும்,
போகா-போகாவாம்; இருந்து ஏங்கி - (இவ்வுண்மை
யறியாமல்) இருந்து ஏக்கமுற்று, நெஞ்சம் புண் ஆக - மனம்
புண்ணாகும்படி. நெடுந்தூரம் தாம் நினைந்து - (அவற்றைத்) தாம்
நெடுந்தூரம் சிந்தித்து, துஞ்சுவதே - மாண்டு போவதே,
மாந்தர் தொழில் - மனிதர் தொழிலாக வுள்ளது.
இருவினைப் பயன்களாகிய இன்பதுன்பங்கள்
தப்பாமல் வந்து கொண்டிருக்கும். ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பத்தை வெறுத்தும்
கவலையுறுதல் தக்க தன்று எ - ம். (5)
|
|
|
|
|
-
6. உள்ள தொழிய ஒருவர்க்
கொருவர்சுகங்
கொள்ளக் கிடையா
குவலயத்தில்-வெள்ளக் கடலோடி மீண்டு கரையேறி
னாலென் உடலோடு வாழும் உயிர்க்கு
(பதவுரை) ஒருவர்க்கு - ஒருவருக்கு,
உள்ளது ஒழிய-(ஊழினால்) உள்ள அளவல்லாமல், ஒருவர்
சுகம் - மற்றொருவருடைய சுகங்களை, கொள்ள,-அநுபவிக்க
விரும்பினால், கிடையா - அவை கூடாவாம்; (ஆதலால்)
குவலயத்தில்-பூமியில், உடலோடு வாழும்
உயிர்க்கு - மக்களுடம்போடு கூடிவாழும் உயிர்களுக்கு, வெள்ளக் கடல்
ஓடி-வெள்ள நீரையுடைய கடல்கடந்து சென்று (பொருள் தேடி), மீண்டு
கரையேறினால் - திரும்பிவந்து கரையேறினாலும், என் -
அதனாற் பயன் என்ன?
கப்பலேறிச் சென்று பெரும்பொருள் ஈட்டினாலும்
ஊழினளவன்றி அநுபவித்தல் கூடாது எ - ம். (6) |
|
|
|
|
-
7. எல்லாப் படியாலும்
எண்ணினால் இவ்வுடம்பு
பொல்லாப் புழுமலிநோய்ப்
புன்குரம்பை-நல்லார் அறிந்திருப்பார் ஆதலினால் ஆங்கமல
நீர்போற் பிறிந்திருப்பார் பேசார்
பிறர்க்கு
(பதவுரை) எல்லாப் படியாலும் -
எல்லா வகையாலும், எண்ணினால் - ஆராயுமிடத்து,
இவ்வுடம்பு - இந்த உடம்பானது, பொல்லாப்
புழு-பொல்லாத புழுக்களுக்கும், மலி நோய்-நிறைந்த
பிணிகளுக்கும், புல் குரம்பை - புல்லிய குடிசையாக இருக்கின்றது;
நல்லார் - நல்லறிவுடையோர், அறிந்திருப்பார்
- (இவ்வுடம்பினிழிவை) அறிந்திருப்பார்கள்; ஆதலினால்-ஆகையால்
(அவர்கள்), கமல நீர் போல் - தாமரை இலையில் தண்ணீர் போல,
பிறிந்து இருப்பார் - (உடம்போடு கூடியும்) கூடாதிருப்பார்கள்;
பிறர்க்குப் பேசார் - (அதைக் குறித்துப்) பிறரிடத்தில்
பேசமாட்டார்கள், ஆம்: அசை.
உடம்பின் இழிவை யறிந்த ஞானிகள் உடம்போடு
கூடி இருப்பினும் அதிற் பற்றற்றிருப்பார்கள் எ - ம்.
(7) |
|
|
|
|
-
8. ஈட்டும் பொருண்முயற்சி
எண்ணிறந்த வாயினும் ஊழ்
கூட்டும் படியன்றிக்
கூடாவாம்-தேட்டம் மரியாதை காணு மகிதலத்தீர்
கேண்மின் தரியாது காணுந்
தனம்
(பதவுரை)
மகிதலத்தீர்-பூமியிலுள்ள மனிதர்களே,
கேண்மின் - கேளுங்கள்; ஈட்டும் பொருள் -
தேடுதற்குரிய பொருள்களானவை, முயற்சி எண் இறந்த
ஆயினும்-முயற்சிகள் அளவில்லாதன வாயினும், ஊழ் கூட்டும்படி அன்றிக்
கூடாவாம் - ஊழ் கூட்டு மளவினல்லாமல் சேராவாம்; தனம்
தரியாது-ஊழினாலே (சேரினும்) அப்பொருள் நிலைபெறாது; தேட்டம்
மரியாதை - (ஆதலினால் நீங்கள்) தேடத்தகுவது மரியாதையே யாம். ஆம்: அசை.
காணுமிரண்டும் முன்னிலை யசை.
(8) |
|
|
|
|
குடிப்பிறந்தார் இல்லை
எனமாட்டார் |
-
9. ஆற்றுப் பெருக்கற்
றடிசுடுமந் நாளுமவ்வாறு
ஊற்றுப் பெருக்கால்
உலகூட்டும்-ஏற்றவர்க்கு நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார்
ஆனாலும் இல்லையென மாட்டார்
இசைந்து
(பதவுரை) ஆற்றுப் பெருக்கு அற்று
- ஆற்றில் வெள்ளம் வற்றிப்போய், அடி சுடும் அந்நாளும்-(மணலானது
வெயிலினாலே காய்ந்து நடப்பவருடைய) அடியைச் சுடுகின்ற அக்காலத்திலும், அவ்
ஆறு - அந்த ஆறானது, ஊற்றுப் பெருக்கால் - ஊற்றுநீர்ப்
பெருக்கினால், உலகு ஊட்டும் - உலகத்தாரை உண்பிக்கும்; (அது போல)
நல்ல குடிப்பிறந்தார்-நற்குடியிற் பிறந்தவர்,
நல்கூர்ந்தார் ஆனாலும்-வறுமையுடையவரானாலும்,
ஏற்றவர்க்கு - இரந்தவர்க்கு, இசைந்து - மனமிசைந்து,
இல்லையென மாட்டார்-இல்லையென்று சொல்லமாட்டார் (இயன்றது
கொடுப்பர்).
உயர்ந்த குடியிற் பிறந்தவர் வறுமைக்
காலத்திலும் இரந்தவர்க்குக் கொடாது விடார் எ -ம்.
(9) |
|
|
|
|
-
10. ஆண்டாண்டு தோறும் அழுது
புரண்டாலும்
மாண்டார் வருவரோ
மாநிலத்தீர்-வேண்டா நமக்கும் அதுவழியே நாம்போம்
அளவும் எமக்கென்னென் றிட்டுண்
டிரும்.
(பதவுரை) மா நிலத்தீர்-பெரிய
பூமியிலுள்ள மனிதர்களே, ஆண்டு ஆண்டு தோறும் அழுது புரண்டாலும் -
வருடா வருடந் தோறும் அழுதுபுரண்டாலும், மாண்டார் வருவரோ -
இறந்தவர் திரும்பி வருவரோ (வரமாட்டார்); வேண்டா - (ஆதலினால்)
அழ வேண்டுவதில்லை; நமக்கும் அதுவழியே - நமக்கும் அம்மரணமே
வழியாகும்; நாம் போம் அளவும்-நாம் இறந்துபோ மளவும்,
எமக்கு என் என்று-எமக்கு யாது சம்பந்தமென்று, இட்டு உண்டு
இரும்-பிச்சையிட்டு நீங்களும் உண்டு கவலையற்று இருங்கள்.
இறந்தவர் பொருட்டு அழுதலாற் சிறிதும்
பயனில்லாமையால் கவலையற்று அறஞ்செய்து வாழ்க எ - ம்.
(10) |
|
|
|
|