21 முதல் 30 வரை
|
|
- மின்னு மிளமை
உளதாம் எனமகிழ்ந்து
பின்னை யறிவெனென்றல்
பேதைமை-தன்னைத் துணித்தானும் தூங்கா
தறஞ்செய்க கூற்றம் அணித்தாய் வருதலு
முண்டு.
(பதவுரை)
மின்னும்-மின்னல் போலும், இளமை-இளமைப் பருவமானது,
உளதாம்-நிலைத்திருக்கும், என மகிழ்ந்து -
என்று மகிழ்ந்து, பின்னை-முதுமையில், அறிவென்
என்றல்-அறத்தினைப்பற்றி அறிவேன் என்று கருதுதல்,
பேதைமை-அறியாமையேயாகும், கூற்றம்-எமன்,
அணித்தாய்-இளமையிலேயே, வருதலும் உண்டு -
ஆயுளைக் கவர்ந்து செல்ல வருதலும் உண்டு, (ஆதலால்) தன்னைத்
துணித்தானும்-தனது உடலை வருத்தியேனும்,
தூங்காது-காலதாமதம் செய்யாமல், அறம்
செய்க-அறத்தினை ஒவ்வொருவனும் செய்வானாக.
(குறிப்பு)
அறிவென்: என் ஈற்றுத்தன்மை ஒருமை வினைமுற்று. துணித்தல்-துண்டாக்கல்,
வருத்தல். (21) |
|
|
|
|
|
22. அறவரணத்தின்
இன்றியமையாமை |
- மூப்பொடு தீப்பிணி முன்னுறீஇப் பின்வந்து
கூற்ற
வரசன் குறும்பெறியும்-ஆற்ற அறவரண மாராய்ந் தடையினஃ தல்லால் பிறவரண
மில்லை யுயிர்க்கு.
(பதவுரை) மூப்பொடு தீ
பிணி-முதுமையையும் கொடிய நோயையும்,
முன்னுறீஇ-முன்னரடைவித்து, கூற்ற அரசன்-எமனாகிய
அரசன், பின் வந்து-பின்னர் அடைந்து, குறும்பு
எறியும்-உடலாகிய அரணை அழிப்பான், ஆராய்ந்து
-பலவற்றாலும் ஆராய்ந்து, ஆற்ற அற அரணம்-மிக்க அறமாகிய
பாதுகாவலை, அடையின் அஃது அல்லால் - அடைந்தாலன்றி,
உயிர்க்கு பிற அரணம் இல்லை - உயிர்களுக்குப் பாதுகாவலான இடம்
வேறொன்றுமில்லை.
(குறிப்பு)
முன்னுறீஇ: சொல்லிசை யளபெடை. அறவரணம்: இருபெயரொட்டுப் பண்புத்தொகை.
(22) |
|
|
|
|
|
23. நன்கு செய்யப்பட வேண்டியது
நல்லறமே |
- திருத்தப் படுவ தறக்கருமந் தம்மை
வருத்தியு
மாண்புடையார் செய்க--பெருக்க வரவும் பெருங்கூற்றம் வன்கண்
ஞமன்கீழ்த் தரவறுத்து மீளாமை கண்டு.
(பதவுரை)
திருத்தப்படுவது-நன்றாகச் செய்யத் தகுவது, அறக்
கருமம்-அறச்செயல்களேயாகும், பெருங் கூற்றம்-வலிமிக்க
எமன், பெருக்க வரவும்-உயிர்களைக் கவர்ந்து செல்லப் பலமுறை
வருதலையும், வன்கண்-கொடிய, ஞமன்-அவ் யமனது,
கீழ்த்தர வறுத்து-கட்டளையை மீறி,
மீளாமை-அவனால் கவரப்பட்ட உயிர்கள் திரும்பாமையையும்,
கண்டு-காணலால், மாண்புடையார்-பெரியோர்கள்,
தம்மை-தமதுடலை, வருத்தியும்-வருத்தியேனும்,
செய்க-அவ்வறத்தினைச் செய்வார்களாக.
(குறிப்பு)
வன்கண்மை-கொடுமை, ஞமன்-யமன்; யகர ஞகர முதற்போலி; அன்றி நமன் ஞமன் என
நகர ஞகரப் போலியுமாம். (23) |
|
|
|
|
|
24. அறத்தினை விரைந்து
செய்க |
- முன்னே ஒருவன் முடித்தான்றன் துப்பெலாம்
என்னே
ஒருவன் இகழ்ந்திருத்தல்?--முன்னே முடித்த படியறிந்து முன்முன் அறத்தைப் பிடிக்க
பெரிதாய் விரைந்து.
(பதவுரை)
முன்னே-தனக்கு முன்னே, ஒருவன்-பிறனொருவன், தன்
துப்பு எலாம்-தன் நுகர்பொருள்பலவற்றையும்,
முடித்தான்-அழித்துச் சென்றான், ஒருவன்-அதனைப்
பார்த்த அவன், இகழ்ந்திருத்தல்-(அறத்தினைச்செய்யாமல்) ஏளனஞ்
செய்திருத்தல், என்னே-என்ன பேதமை!, முன்னே முடித்த
படியறிந்து-முன்னே பெரியோர்கள் செய்த வழியை யறிந்து,
முன்முன்-மேலும்மேலும், பெரிதாய் விரைந்து-மிக
விரைந்து, அறத்தைப்பிடிக்க-அறத்தினைச் செய்க.
(குறிப்பு)
முன்முன்: அடுக்குத் தொடர், விரைவுப் பொருள் கூறியது. பிடிக்க: வியங்கோள்.
(24) |
|
|
|
|
|
25. அறஞ்செய்யாமையால்
வருங்கேடு |
- குறைக்கருமம் விட்டுரைப்பிற் கொள்ள
உலவா
அறக்கருமம் ஆராய்ந்து செய்க--பிறப்பிடைக்கோர் நெஞ்சேமாப்
பில்லாதான் வாழ்க்கை நிரயத்துத் துஞ்சாத் துயரந்
தரும்.
(பதவுரை)
பிறப்பிடைக்கு-மறு பிறப்பிற்கு, ஓர்-ஒப்பற்ற,
நெஞ்சு-தன் மனத்தை, ஏமாப்பு
இல்லாதான்-அரணாகக் கொள்ளாதவன்,
வாழ்க்கை-வாழ்க்கையானது, நிரயத்து-நரகில்,
துஞ்சா-அழிவில்லாத, துயரம்
தரும்-துன்பத்தினைக்கொடுக்கும் (ஆதலால்) அறக்
கருமம்-அறவினையை, ஆராய்ந்து செய்க- (நெஞ்சே!)
ஆராய்ந்து செய்வாயாக, குறைக்கருமம்-இன்றி யமையா வினைகளை,
விட்டு உரைப்பின்-விரித்துக் கூறப்புகின், கொள்ள
உலவா-அளவிலடங்கா.
(குறிப்பு)
குறைக்கருமம்-வேண்டிய நிலையிற் குறைந்த வினைகள்.
(25) |
|
|
|
|
|
- அறம்புரிந் தாற்றுவ செய்யாது நாளும்
உறங்குதல் காரண
மென்னை?--மறந்தொருவன் நாட்டு விடக்கூர்தி அச்சிறுங் காலத்துக் கூட்டுந்
திறமின்மை யால்.
(பதவுரை)
ஒருவன்-நான்முகன், நாட்டு-படைத்த, விடக்கு
ஊர்தி-இறைச்சியாலாகிய வாகனம் (உடல்), அச்சு
இறுங்காலத்து-அச்சொடிந்து (உயிர் பிரிந்து) அழியுங்
காலத்தில், கூட்டும் திறம் இன்மையால்-அதனைப்
பொருத்தி நடத்தும் தன்மை இன்றாகவும், அறம் புரிந்து-அறத்தினை
விரும்பி, ஆற்றுவ செய்யாது-இயன்ற அளவு செய்யாமல், மறந்து
நாளும் உறங்குதல்-மறந்துபோதலால் எப்பொழுதும் காலத்தை வீணே கழித்தல்,
என்னை காரணம்-(நெஞ்சே) யாது கருதி?
(குறிப்பு)
அச்சு-உயிர்; ஊர்தியாகிய உடலின் ஆதரவான பாகம் .
(26) |
|
|
|
|
|
27. அறனில்லா வாழ்க்கை
யழிவேயாம் |
- பாவம் பெருகப் பழிபெருகத் தன்னோம்பி
ஆவதொன்
றில்லை யறனழித்துப்--பாவம் பொறாஅ முறைசெய் பொருவில்
ஞமன்கீழ் அறாவுண்ணும் ஆற்றவு நின்று.
(பதவுரை)
முறைசெய்-நீதியைச் செய்கின்ற, பொரு இல்-ஒப்பற்ற,
ஞமன்-எமன், பாவம் பொறாஅ-நாம் செய்யும்
பாவத்தினைப் பொறாமல், ஆற்றவும் நின்று-மிகவும் அசைவின்றி
நின்று, கீழ் அறா உண்ணும்-மறைந்து ஆயுளைக் குறைத்து உண்பானாதலின்,
அறனழிந்து-அறத்தினைக் கொன்று, பாவம்
பெருக-பாவம் பெருகவும், தன் ஓம்பி-தன்னை ஓம்பி
வாழ்வதால்,ஆவது ஒன்று இல்லை-ஆகும் பயனொன்றும்
இல்லை.
(குறிப்பு)
பொறாஅ: இசைநிறை யளபெடை, ஞமன்-யமன்; முதற்போலி .
(27) |
|
|
|
|
|
- முற்செய் வினையின் பயன்றுய்த்
ததுவுலந்தால்
பிற்செய் வினையின்பின் போகலால்--நற்செய்கை ஆற்றுந் துணையும்
அறமறவேல் நன்னெஞ்சே! கூற்றங் குடில்பிரியா முன்.
(பதவுரை) நல்
நெஞ்சே-நல்ல மனமே!, முன் செய்
வினையின்-முற்பிறப்பிற் செய்த வினையினது, பயன்
துய்த்து-பயனை அனுபவித்து, அது உலந்தால்-அஃது அழிந்தால்,
பின் செய்-இப் பிறப்பில் செய்த, வினையின்பின்
போகலால்-வினைவழியே சென்று வேறு பிறப்பினை அடைவதால்,
கூற்றம்-எமன், குடில் பிரியா முன்-உடலினின்றும்
உயிரை வேறு படுப்பதன் முன், நற்செய்கை-நல்வினையை,
ஆற்றுந் துணையும்-செய்ய ஆற்றலுளதாங் காலம் முடிய, அறம்
மறவேல்-அறத்தினை மறவாது செய்வாயாக.
(குறிப்பு)
குடில்-உயிரின் இருக்கையாகிய உடல். மறவேல்: எதிர்மறை ஏவலொருமை
வினைமுற்று. (28) |
|
|
|
|
|
29. கிடைத்ததைக்கொண்டு
அறஞ்செய்க |
- திரையவித்து நீராட லாகா உரைப்பார்
உரையவித்
தொன்றுஞ்சொல் இல்லை-அரைசராய்ச் செய்தும் அறமெனினும் ஆகா
துளவரையால் செய்வதற்கே ஆகுந் திரு.
(பதவுரை) திரை அவித்து
நீராடல் ஆகா-அலைகளை ஒழித்துப் பின் கடல் நீராடுதல் எவர்க்கும் ஆகாது
(என்று), உரைப்பார் உரை அவித்து-உரைப்பவர் உரையை விட்டால்,
ஒன்றும் சொல் இல்லை-வேறு மெய்ம்மை பொருந்தும் சொல் இல்லை,
(ஆதலின்), அரைசராய்ச் செய்தும் அறமெனினும் ஆகாது-ஒருவர்
அரசராய்ப் (பெருஞ் செல்வம்) பெற்றபின் அறத்தினைச் செய்வேமெனக் கருதின்
அக்காலத்துச் செல்வம், அவருக்கு அறஞ்செய்ய உதவுவதில்லை, உளவரையால்
செய்வதற்கே ஆகும் திரு-பெற்ற அளவினுக்கேற்ப அவ்வப்போது அறஞ்செய்யப்
புகுகின்றவனுக்கே அறஞ்செய்வதற்குத் துணையாக நிற்கும் அவனது செல்வம்.
(குறிப்பு)
“அலையொழிந்து கடலாடலாகாது” என்பது பழமொழி. உரைவித்து: எச்சத்திரிபு.
அரைசர்-அரசர்; இடைப்போலி.
(29) | |
|
|
|
|
30. மூடனுக்கு அறவுரையாற்
பயனில்லை |
- கல்லா ஒருவனைக் காரணங் காட்டினும்
இல்லைமற்
றொன்றும் அறனுணர்தல்--நல்லாய் நறுநெய் நிறைய முகப்பினு மூழை பெறுமோ சுவையுணரு
மாறு.
(பதவுரை)
நல்லாய்-நற்குணமிக்க பெண்ணே!, மூழை - அகப்பையானது,
நறு நெய்-நல்ல நெய்யோடு கலந்த உணவை, நிறைய
முகப்பினும்-நிறைய முகக்கு மாயினும், சுவை
உணருமாறு-சுவையினை அறியுந் தன்மையை,
பெறுமோ-உடையதாகுமோ? (ஆகாது), அதுபோல, கல்லா
ஒருவனை-படியாத ஒருவனுக்கு, காரணம் காட்டினும்-காரணங்காட்டி
விளக்கிச் சொன்னாலும், அறன் உணர்தல் மற்று ஒன்றும் இல்லை-அவன்
அறத்தினை ஒரு சிறிதும் உணரான்.
(குறிப்பு)
ஒருவனை: உருபு மயக்கம். ‘அகப்பை யறுசுவை யறியுமோ?’ என்பது பழமொழி
.காட்டினும், முகப்பினும்: உயர்வு சிறப்பும்மைகள்.
(30) |
|
|
|
|
|