141 முதல் 150 வரை
 
141. அடக்கம் அனைத்தையும் தரும்

தன்னைத்தன் நெஞ்சங் கரியாகத் தானடங்கின்
பின்னைத்தான் எய்தா நலனில்லை--தன்னைக்
குடிகெடுக்குந் தீநெஞ்சின் குற்றவேல் செய்தல்
பிடிபடுக்கப் பட்ட களிறு.
(பதவுரை) தன்னைத் தன் நெஞ்சம் கரியாகத் தான் அடங்கின்-தன் செயல்களுக்குத் தன் மனத்தினையே சான்றாக வைத்து ஒருவன் அடங்குவானாயின், பின்னைத்தான் எய்தா நலன் இல்லை-பின்னர் அவனால் அடையமுடியாத இன்பம் எவ்வுலகத்து மில்லை; தன்னைக் குடிகெடுக்கும் தீ நெஞ்சின் குற்றேவல் செய்தல்-தன்னைத்தான் பிறந்த குடியோடு கெடுக்கின்ற தீய நெஞ்சினுக்குத் தொண்டு பூண்டு ஒழுகுதல், பிடி படுக்கப்பட்ட களிறு-பார்வை விலங்காக நிறுத்தப்பெற்ற பெண் யானையை விரும்பிக் குறியிடத் தகப்பட்ட களிறேபோல் எஞ்ஞான்றும் வருந்துதற்குக் காரணமாகும்.

(குறிப்பு) களிறு-ஆண் யானை; பிடி-பெண் யானை. குறுமை+ஏவல்=குற்றேவல்; எளிய வேலைகள். கரி-சான்று, சாட்சி. (141)

   
142. உள்ளத்துயர்வே உயர்வுறும்

உள்ளூர் இருந்துந்தம் உள்ளமறப் பெற்றாரேல்
கள்ளவிழ் சோலையாங் காட்டுளார் காட்டுள்ளும்
உள்ளம் அறப்பெறு கல்லாரேல் நாட்டுள்ளும்
நண்ணி நடுவூ ருளார்.
(பதவுரை) உள்ளூர் இருந்தும் தம் உள்ளம் அறப் பெற்றாரேல்-இல் வாழ்க்கையை மேற்கொண்டு நடுவூரின்கண்ணே வாழ்ந்தாலும் தம் மனமடங்கப் பெறுவாராயின், கள் அவிழ்சோலை ஆம் காட்டு உளார்-அவர், தேன் சொரிகின்ற மலர்கள் நிறைந்த சோலையையுடைய காட்டின்கண்ணே வாழும் துறவியே ஆவர்; காட்டுள்ளும் உள்ளம் அறப்பெறுகல்லாரேல்-துறவறத்தை மேற்கொண்டு காட்டின்கண்ணே வாழ்ந்தாலும் தம் மனமடங்கப் பெறாராயின், நாட்டுள்ளும் நடுவூர் நண்ணி உளார்-அவர் நாட்டின் கண்ணதாகிய நடுவூரில் மனைவாழ்க்கையை மேற்கொண்டிருந்து, தீய செயல்களைப் பொருத்தி வாழும் கயவரையொப்பர்.

(குறிப்பு) உள்ளூர், மக்கள் கூடிவாழும் இடமாதலின் இல்வாழ்க்கையைக் குறிக்கவல்லதாயிற்று. நடுவூர் மக்களிடையே நெருங்கி வாழும் இடமாதலின் தீய செயல்களைச் செய்யப்படுமிடமாகக் கருதப்பட்டது. (142)

   
143. மனத்தை யடக்குவார் மாபெருஞ் சிறப்படைவர்

நின்னை யறப்பெறு கிற்கிலேன் நன்னெஞ்சே!
பின்னையான் யாரைப் பெறுகிற்பேன்--நின்னை
அறப்பெறு கிற்பேனேல் பெற்றேன்மற் றீண்டே
துறக்கம் திறப்பதோர் தாழ்.
(பதவுரை) நல் நெஞ்சே நின்னை அறப் பெறுகிற்கிலேன்-நல்ல நெஞ்சே! உன்னைச் சிறிதும் என் வசமாக்கிக்கொள்ள முடியாமல் இருக்கின்றேன்; பின்னை-இனி, யான்-உன்னையே வசமாக்கிக்கொள்ளாத யான், யாரைப் பெறுகிற்பேன்-மற்றையவர்களை எங்ஙனம் வசமாக்க வல்லவனாவேன்!, நின்னை அறப்பெறுகிற்பேனேல்-உன்னை முற்றிலும் என்வசமாக்கிக் கொள்வேனாயின், துறக்கம் திறப்பது ஓர் தாழ்-துறக்க உலகத்தினைத் திறந்துவிட வல்லதாகிய ஒப்பற்ற திறவுகோலை, ஈண்டே பெற்றேன்-இம்மையிலேயே பெற்றவனாவேன்.

(குறிப்பு) கில்: ஆற்றல் இடைநிலை: பெற்றேன்: உறுதிபற்றி வந்த காலவழுவமைதி. மற்று: அசைநிலை. ஏ: பிரிநிலை. (143)

   
144, ஐம்பொறிகளும் ஆடம்பரத் தோழர்களாம்

ஆதன் பெருங்களி யாளன் அவனுக்குத்
தோழன்மார் ஐவரும் வீண்கிளைஞர்--தோழர்
வெறுப்பனவும் உண்டெழுந்து போனக்கால் ஆதன்
இறுக்குமாம் உண்ட கடன்.
(பதவுரை) ஆதன் பெருங் களியாளன் அவனுக்கு-அறிவில்லாதவனும் மிக்க மயக்கத்தையுடையவனுமாகிய ஒருவனுக்கு, தோழன்மார் ஐவரும் வீண் கிளைஞர்-ஐம்பொறிகளாகிய நட்பினரைவரும் இடுக்கண் வந்துழி உதவாத உறவினரேயாவர்: தோழர்-அந்நட்பினர், வெறுப்பனவும்-அறிஞர்களால் வெறுக்கப்படும் தீவினை காரணமாக வருவனவற்றையும், உண்டு-உவகையோடு நுகர்ந்து, எழுந்து போனக்கால்-உடம்போடு எழுந்துபோன (மரணத்தின்) பின்னர், உண்ட கடன்-அவர்களை உண்பிக்கத் தான்பட்ட கடனாகிய தீவினையை, ஆதன் இறுக்கும் ஆம்-அவ்வறிவில்லாதவன் அதனால் வரும் துன்பத்தை மறுமையில் அனுபவத்தே தீர்ப்பவனாவான்.

(குறிப்பு) இதனால் அறிவில்லாதவர்கள் மறுமைக்காகச் செய்து கொள்வது துன்பமேயன்றி இன்பமில்லை என்பது பெறப்பட்டது. ‘உண்ட’ என்பது பிறவினைப்பொருளில் வந்தது. (144)

   
145. மனத்தை யடக்கியவன் மாபெருந் தெய்வம்

தன்னொக்குந் தெய்வம் பிறிதில்லை தான்றன்னைப்
பின்னை மனமறப் பெற்றானேல்--என்னை
எழுத்தெண்ணே நோக்கி இருமையுங் கண்டாங்(கு)
அருட்கண்ணே நிற்ப தறிவு.
(பதவுரை) தன்னைப் பின்னை மனம் அறத்தான் பெற்றானேல்-இன்பம் பயப்பது போன்ற தன்னைத் தீநெறிகளில் முன்னர்ச் செலுத்திப் பின்னர் வருந்துகின்ற மனத்தினை ஒருவன் அடக்குவானாயின், தன் ஒக்கும் தெய்வம் பிறிதில்லை-அவனை நிகர்க்கும் தெய்வம் வேறொன்றும் இல்லை; எழுத்து எண்ணே நோக்கி என்னை-இலக்கணம் சோதிடம் முதலியவற்றையே ஆராய்வதால் மறுமைக்கு ஆகும் பயன் யாது, இருமையும் கண்டு-இம்மையிற் புகழும் மறுமையிலின்பமும் பயக்கும் நூல்களையே ஆராய்ந்து அறிந்து, அருட்கண்ணே நிற்பது அறிவு-அருளை மேற்கொண்டு ஒழுகுதலே அறிவுடைமையாகும்.

(குறிப்பு) ஆங்கு: அசைநிலை; ஏழனுருபு. (145)

   
146. அறிவார்க்கும் அறியார்க்கும் கவலை யொன்றே

தடுமாற்றம் அஞ்சிய தன்மை உடையார்*
விடுமாற்றந் தேர்ந்தஞ்சித் துஞ்சார்--தடுமாற்றம்
யாதும் அறியாரும் துஞ்சார்தம் ஐம்புலனும்
ஆரும்வகை யாதாங்கொ லென்று.

*தம்மையுடையார்

(பதவுரை) தடுமாற்றம் அஞ்சிய தன்மையுடையார்-கலக்கத்திற்குக் காரண மாகிய பிறப்பு இறப்புகளை அஞ்சிய பெரியோர்கள், விடுமாற்றம் தேர்ந்து அஞ்சித் துஞ்சார்-அவற்றைப் போக்கும் உபாயத்தினை ஆராய்ந்துகொண்டே அவ்வச்சத்தால் துயிலார், தடுமாற்றம் யாதும் அறியாரும்-பிறப்பு இறப்புகளைச் சிறிதும் சிந்தியாதவர்களும், தம் ஐம்புலனும் ஆரும் வகை யாதாம் என்று துஞ்சார்-தம் ஐம்பொறிகளாலும் இன்பத்தை நுகருதற்கேற்ற உபாயம் யாது? என்று ஆரய்ந்துகொண்டே கவலையால் துயிலார்.

(குறிப்பு) ஆர்தல்-நுகர்தல்; தடுமாற்றம்-தடுமாறுதல்: அம் ஈற்றுத்தொழிற்பெயர். கொல்: ஐயம். 'பாலுக்குச் சர்க்கரையில்லை யென்பார்க்கும் பருக்கையற்ற, கூழுக்குப்போட உப்பில்லை யென்பார்க்கும்......விசனமொன்றே' என்ற தொடர்மொழியின் பொருளை ஈண்டு ஒப்பு நோக்குக. (146)

   
147. ஐம்பொறிகளால் ஆங்காலுந் துன்பம், போங்காலுந் துன்பம்

ஆர்வில் பொறியைந்திற் காதி இருவினையால்
தீர்விலநீ கோதாதி சேர்விக்குந்--தீர்வில்
பழியின்மை யெய்தின் பறையாத பாவம்
வழியும் வருதலு முண்டு.
(பதவுரை) நீ ஆர்வில் பொறி ஐந்திற் காதி-நீ செல்வமுற்ற காலத்து நிரப்புதற் கொண்ணாத மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளுக்கும் ஆளாகின்றாய்; இன்மை எய்தின்-நீ வறுமையுற்ற காலத்து, இரு வினையால்-நல்வினை தீவினை என்னுமிருவினைகளால், தீர்வில கோதாதி சேர்விக்கும்-விட்டு விலக இயலாத குற்றமுதலியவற்றில் படிவிக்கும்படியான, தீர்வில் பழி-நீங்குதலில்லாத பழியும், பறையாத பாவம்-இத்தன்மையதென் றியம்ப வொண்ணாத கொடிய நிலையும், வழியும்-அப்பொறிகளின் வழியாக, வருதலும்உண்டு-ஏற்படுதலும்கூடும்.

(குறிப்பு) சேர்விக்கும்: பிறவினைப் பெயரெச்சம். வழியும்-உம்: அசைநிலை, வருதலும்-உம்: எதிர்மறைப்பொருளது. (147)

   
148. மனத்துறவுள்ளோர் மயக்கில் அகப்படார்

அலைபுனலுள் நிற்பினும் தாமரை ஈன்ற
இலையின்கண் நீர்நிலா தாகும்--அலைவிற்
புலன்களில் நிற்பினும் பொச்சாப் பிலரே
மலங்கடி வாளா தவர்க்கு.
(பதவுரை) அலை புனலுள் நிற்பினும்-அலைகளையுடைய நீரின் கண்ணே நின்றாலும், தாமரை ஈன்ற இலையின்கண்-தாமரையிலையிடத்து, நீர் நில்லாது ஆகும்-நீர் ஒட்டி நில்லாது; (அதுபோல), அலைவிற் புலன்களில் நிற்பினும்-சஞ்சலத்தைத் தருகின்ற பஞ்சேந்திரியங்களோடு கூடியிருந்தாலும், தவர்க்கு-முனிவர்களை, கடிவுமலம் ஆளா-அழிவினைத் தருகின்ற ஆசை வெகுளி முதலியவை அடிமைகொள்ளா; பொச்சாப்பு இலர்-அவர்களும் மறதியால் அவற்றின் வயப்படுதலு மிலர்.

(குறிப்பு) 'தவர்க்கு' என்பதில் இரண்டனுருபுக்கு நான்கனுருபு வந்துள்ளது: உருபு மயக்கம். ஏ: ஈற்றசை. அலை புனல்: வினைத்தொகை. (148)

   
149. தன்னலமற்ற அறமே தலையாய அறமாம்

பெற்றி கருமம் பிழையாமற் செய்குறின்
பற்றின் கண் நில்லா தறஞ்செய்க--மற்றது
பொன்றாப் புகழ்நிறுத்திப் போய்ப்பிறந்த ஊர்நாடிக்
கன்றுடைத் தாய்போல் வரும்.
(பதவுரை) பெற்றி கருமம் பிழையாமல் செய்குறின்-நெஞ்சே! நற்குணமிக்க செயல்களைத் தவறாமல் செய்யக்கருதினால், பற்றின்கண்நில்லாது அறஞ்செய்க-அவாவின்றி அறத்தினைச் செய்வாயாக, அது-அவ்வறம், பொன்றாப் புகழ் நிறுத்தி-இம்மையில் அழிவில்லாத புகழை நிலைபெறச் செய்து, போய்ப் பிறந்த ஊர் நாடி-மறுமையில் நீ சென்று பிறந்த ஊரைத்தேடி, கன்று உடை தாய்போல் வரும்-தாய்ப்பசு தன் பாலை யருந்தத் தன் கன்றை நாடி விரைந்து வருதல்போலத் தன் பயனாகிய இன்பத்தை நுகர்விக்க உன்பால் விரைந்து வரும்.

(குறிப்பு) பொன்றா: பொன்றாத என்பதன் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். ''பல்லாவுள'' எனத் தொடங்குகின்ற நாலடியாரின் செய்யுட் பொருளை ஈண்டு ஒப்பு நோக்குக. (149)

   
150. இன்பமும் துன்பமும் ஒன்றென எண்ணுக

பேறழிவு சாவு பிறப்பின்பந் துன்பமென்
றாறுள அந்நாள் அமைந்தன--தேறி
அவையவை வந்தால் அழுங்காது விம்மா(து)
இவையிவை என்றுணரற் பாற்று.
(பதவுரை) பேறு-செல்வம், அழிவு-வறுமையும், சாவு-இறப்பும், பிறப்பு-பிறப்பும், இன்பம்-இன்பமும்,துன்பம்-துன்பமும், என்ற ஆறு-என்று சொல்லப்படுகின்ற ஆறும், அந்நாள் அமைந்தன உள-முன்செய்த வினைகாரணமாக ஒவ்வொருவருக்கும் அமைந்துள்ளன; அவையவை வந்தால்-இன்ப துன்பங்களுக்குக் காரணமாகிய அவை மாறி மாறி வருந்தோறும், விம்மாது-மகிழாமலும், அழுங்காது-வருந்தாமலும், இவை-நம்மை நாடி வந்த இவை, இவை என்று தேறி உணரற்பாற்று-இன்ன வினைகளால் வந்தவை என்று ஆராய்ந்தறிந்து அடங்குதலே செயத்தக்கது.

(குறிப்பு) என்ற+ஆறு=என்றாறு: அகரம் தொகுத்தல். அவை அவை: அடுக்குத்தொடர்; மிகுதிப்பொருளது. (150)