191 முதல் 200 வரை
|
|
191. பிறவிப் பிணியினைப்
பெயர்க்கும் வழி |
- உணர்ச்சியச் சாக உசாவண்டி யாகப்
புணர்ச்சிப்
புலனைந்தும் பூட்டி--உணர்ந்ததனை ஊர்கின்ற பாகன் உணர்வுடைய
னாகுமேல் பேர்கின்ற தாகும் பிறப்பு.
(பதவுரை) உணர்ச்சி அச்சாக
உசா வண்டியாக - அறிவை அச்சாணியாகவுடைய ஆராய்ச்சி யென்னும் வண்டியில்,
புணர்ச்சி புலனைந்தும் பூட்டி- ஐம்பொறி களாகிய புரவிகளைந்தையும்
சேர்த்துப் பூட்டி, உணர்ந்து அதனை ஊர்கின்ற பாகன்-செலுத்தும்
நெறியை அறிந்து அவ் வண்டியைச் செலுத்துகின்ற உயிராகிய பாகன், உணர்வு
உடையனாகுமேல்-தெளிந்த அறிவினையும் உடையனாயின், பிறப்புப்
பேர்கின்றதாகும்-பிறவிப்பிணி அவனை விட்டு நீங்குவதாகும்.
(குறிப்பு)
உணர்ச்சி உசா புலன் இவை முறையே அச்சு வண்டி புரவிகளாக
உருவகிக்கப்பட்டுள்ளன. பெயர்தல்-பேர்தல்: மரூஉ. (191) |
|
|
|
|
|
192. பிறவியை யொழித்தலே
பேரறிவாம் |
- தறுகண் தறுகட்பம் தன்னைத்தான் நோவல்
உறுதிக்
குறுதி உயிரோம்பி வாழ்தல் அறிவிற் கறிவாவ தெண்ணின் மறுபிறப்பு மற்றீண்டு
வாரா நெறி.
(பதவுரை)
எண்ணின்-ஆராயின், தறுகண் தறுகட்பம் - அஞ்சாமையுள்
அஞ்சாமையாவது, தன்னைத்தான் நோவல்-தன்கண் குறையுளதாயின் அதனைக்
கண்டு வருந்துதலாம், உறுதிக்குறுதி உயிரோம்பி வாழ்தல்-நல்ல
செயல்களுள் நல்ல செயலாவது பிறவுயிர்களைப் பாதுகாத்து வாழ்தலாம்,
அறிவிற்கறிவாவது ஈண்டு மறுபிறப்பு வாராநெறி-அறிவினுள் அறிவாவது
இவ்வுலகில் மீட்டும் பிறவாமைக்கேதுவாகிய நெறியின்கண் ஒழுகுதலாம்.
(குறிப்பு)
தறுகண்-அஞ்சாமை, ''தந்திரிக் கழுகு தறுகண் ஆண்மை'' என்ற தொடரில்
இப்பொருள் காண்க. தறுகட்டறு கட்பம்-பெருமைக்கெல்லாம் பெருமை என்பாருமுளர். மற்று:
அசைநிலை. (192) |
|
|
|
|
|
193. வீட்டுலகினை
யுறும்விதம் |
- உயிர்வித்தி ஊன்விளைத்துக் கூற்றுண்ணும்
வாழ்க்கைச்
செயிர்வித்திச் சீலத்தின் றென்னை?--செயிரினை மாற்றி மறுமை
புரிகிற்பின் காணலாங் கூற்றங் குறுகா இடம்
(பதவுரை) உயிர் வித்தி
ஊன்விளைத்துக் கூற்று உண்ணும் வாழ்க்கை-உயிர்களாகிய விதையை விதைத்து
உடல்களாகிய தானியத்தை விளைவித்து, கூற்றுவன் உண்ணுதற்குக் காரணமாகிய இவ்வுலக
வாழ்க்கையை மெய்யென நம்பி, செயிர் வித்தி - தீமையை விதைத்து,
சீலம் தின்று என்னை - நல்லொழுக்கமாகிய விதைகளை விதையாமல்
தின்பதால் வரும் பயன் யாது?, செயிரினை மாற்றி- தீவினையை
மாற்றி, மறுமை புரிகிற்பின்-மறுமை இன்பத்துக்குக் காரணமாகிய
அறத்தினைச் செய்யின், கூற்றம் குறுகா இடம் காணலாம்-எமன் அணுகாத
வீட்டினை அடைந்து இன்புறலாம்.
(குறிப்பு)
உயிர், ஊன், இவ்விரண்டும் விதைகளாகவும் விளைபொருளாகவும் கூறப்பட்டுள்ளன.
(193) |
|
|
|
|
|
194. நல்லொழுக்கமே வீட்டிற்கு
வித்தாம் |
- இருளே உலகத் தியற்கை இருளகற்றும்
கைவிளக்கே கற்ற
அறிவுடைமை--கைவிளக்கின் நெய்யேதன் நெஞ்சத் தருளுடைமை
நெய்பயந்த பால்போல் ஒழுக்கத் தவரே பரிவில்லா மேலுலகம் எய்து
பவர்.
(பதவுரை) உலகத்து இயற்கை
இருளே-இவ்வுலகம் அறியாமை என்னும் இருளால் நிறைந்ததேயாகும்,கற்ற
அறிவுடைமை இருள் அகற்றும் கைவிளக்கே- ஞான நூல்களை கற்றதனலாய அறிவுடைமை
அவ் விருளைப்போக்கும் கைவிளக்கேயாகும்; நெஞ்சத்து அருளுடைமை கைவிளக்கின்
நெய்யே-மனத்தின்கண்ணுள்ள அருள் அவ்விளக்கெரித்தற்குக் காரணமாகிய
நெய்யேயாகும், நெய் பயந்த பால்போல் ஒழுக்கத்தவரே-நெய்க்குக்
காரணமாகிய பால்போன்ற தூய ஒழுக்கமுடையவரே, பரிவு இல்லா மேல் உலகம்
எய்துபவர்-துன்பமற்ற வீட்டுலகத்தினை யடைபவராவர்.
(குறிப்பு) ஒருவன்
கல்வியறிவொளியாலும் நெஞ்சத்தருளாலும், தூய ஒழுக்காலும் மேலுலக மெய்துவன் என்பது
கருத்து. பயந்த-பய: பகுதி. இஃது ஐந்தடிகளான் வந்த பஃறொடை வெண்பா.
(194) |
|
|
|
|
|
195. வீட்டு நெறியின்
இயல்பு |
- ஆர்வமும் செற்றமும் நீக்கி அடங்குதல்
சீர்பெறு
வீட்டு நெறியென்பார்--நீர்புகப் பட்டிமை புக்கான் அடங்கினன்
என்பது கெட்டார் வழிவியக்கு மாறு.
(பதவுரை) ஆர்வமும்
செற்றமும் நீக்கி-காமவெகுளிகளை நீக்கி, அடங்குதல்-
மனமொழி மெய்களால் தீயன புரியா தடங்குதல், சீர்பெறு வீட்டுநெறி
என்பர்-சிறப்புடைய வீடுபேற்றினை யடைவிக்கும் நெறி என்று ஆன்றோர் கூறுவர்,
(அவ்வழி அடங்காது) நீர் புகப் பட்டிமை புக்கான் - புனல் மூழ்கித்
துறவி வேடமட்டுங் கொண்டான், அடங்கினன் என்பது-அடங்கினனாகப்
பாவித்திருத்தல், கெட்டார் வழி வியக்குமாறு-தீயூழினையுடையார்
அதனை வியந்து பின்பற்றுவதை யொக்கும்.
(குறிப்பு)
என்பர்: பலர்பால் எதிர்கால வினைமுற்று. கெட்டார் வழி வியக்கும்
ஆறு-தவறிய ஒழுக்கமுடையார் அவ்வொழுக்கினை வியப்பது எனலுமாம்.
(195) |
|
|
|
|
|
196. அற்றது பற்றெனின் உற்றது
வீடு |
- அருளால் அறம்வளரும் ஆள்வினையால் ஆக்கம்
பொருளால்
பொருள்வளரும் நாளும்--தெருளா விழைவின்பத் தால்வளரும் காமமக்
காம விழைவின்மை யால்வளரும் வீடு.
(பதவுரை) அருளல் அறம்
வளரும்-துன்பத்தால் வருந்தும் உயிர்கட்கு இரங்கி அருள்செய்வதால் அறமானது
வளரும், ஆள்வினையால் ஆக்கம்-முயற்சியால் பெருவாழ்வு உளதாம்,
நாளும் பொருளால் பொருள் வளரும்-எக்காலத்தும் செல்வத்தால்
செல்வம் உண்டாம், தெருளா விழை வின்பத்தால் காமம்
வளரும்-மயக்கத்தைத் தரும் சிற்றின்பத்தால் ஆசை பெருகும், காம
விழைவின்மையால் வீடு வளரும்-ஆசையைவிட வீடுபேறு உளதாம்.
(குறிப்பு)
தெருள்-அறிவு. இதன் எதிர்மொழி மருள். தெருளா விழைவு-புணர்ச்சி, இணை
விழைச்சு. விழைவு-விருப்பம்.
(196) |
|
|
|
|
|
197. வீட்டுக்குரிய பொருளை
வினவலே செவிப்பயனாம் |
- பண்ணமை யாழ்குழல் கீதமென் றின்னவை
நண்ணி நயப்ப
செவியல்ல--திண்ணிதின் வெட்டெனச் சொன்னீக்கி விண்ணின்பம்
வீட்டொடு கட்டுரை கேட்ப செவி.
(பதவுரை) பண் அமை யாழ்
குழல் கீதம் என்றின்னவை நண்ணி நயப்ப செவியல்ல-இசையொடு பொருந்திய யாழ்
குழல் இசைப்பாட்டு என்பவற்றை அவை நிகழுமிடங்களை யடைந்து விரும்பிக் கேட்பன
செவிகளாகா, திண்ணிதின் - உறுதியொடு, வெட்டெனச் சொல்
நீக்கி-பிறர் கூறுங் கடுஞ் சொற்களைக் கேளாது, விண்ணின்பம்
வீட்டொடு கட்டுரை கேட்ப செவி - துறக்க இன்பத்தினையும் வீடுபேற்றையும்
பயக்கும் உறுதிமொழிகளைக் கேட்பனவே செவிகளாகும்.
(குறிப்பு)
இயற்கையிற் செவிக் கின்பஞ்செய்யும் யாழ் குழல் பாட்டு இவற்றால்
மகிழ்வுறும் செவி செவியல்ல என்றபடி.
(197) |
|
|
|
|
|
198. அஞ்செவிக் கழகு அறிவுரை
கேட்டல் |
- புண்ணாகப் போழ்ந்து புலால்பழிப்பத்
தாம்வளர்ந்து
வண்ணப்பூண் பெய்வ செவியல்ல--நுண்ணூல் அறவுரை கேட்டுணர்ந்(து)
அஞ்ஞான நீக்கி மறவுரை விட்ட செவி.
(பதவுரை) புண்ணாகப்
போழ்ந்து-புண்ணாகுமாறு துளைக்கப்பட்டு, புலால் பழிப்பத் தாம்
வளர்ந்து-புலால் நாற்றம் வீசுகிறதென்று பிறர் பழிக்குமாறு வளர்ந்து,
வண்ணப்பூண் பெய்வ செவியல்ல-அழகிய அணிகள் அணியப் படுவன
செவிகளல்ல, நுண் அறநூல் உரை கேட்டு உணர்ந்து-நுண்ணிய
அறநூற்பொருள்களைக் கேட்டாராய்ந்து, அஞ்ஞானம் நீக்கி -
அறியாமையைப் போக்கி, மறவுரை விட்ட செவி-பாவத்துக்குக் காரணமான
சொற்களைக் கேளா தொழிவன செவிகளாகும்.
(குறிப்பு) நுண்மை
நூல்-நுண்ணூல். போழ்தல்-பிளத்தல்; குத்தல். அறம்xமறம்: எதிர்மொழிகள். அம் -
அழகு. (198) |
|
|
|
|
|
199. அறநூலைக் கேட்டறிந்தனவே
அழகிய செவிகளாம் |
- கண்டவர் காமுறூஉங் காமருசீர்க் காதிற்
குண்டலம்
பெய்வ செவியல்ல--கொண்டுலகில் மூன்றும் உணர்ந்தவற்றின் முன்னது
முட்டின்றிச் சூன்று சுவைப்ப செவி.
(பதவுரை) கண்டவர் காமுறூஉம்
காமருசீர் காதில் குண்டலம் பெய்வ செவியல்ல-பார்த்தவர் விரும்பும் சீரிய
அழகினையுடைய காதில் குண்டலங்க ளணியப்படுவன செவிகள் ஆகா, உலகில் மூன்றும்
உணர்ந்து கொண்டு-உலகின்கண் அறம் பொருள் இன்பங்களை யுணர்த்தும் நூல்களைக்
கேட்டறிந்துகொண்டு, அவற்றின் -அவற்றுள்,
முன்னது-தலைமையான அறநூலை, முட்டு
இன்றி-ஒழிவின்றி, சூன்று சுவைப்ப செவி-கேட்டு ஆராய்ந்து
இன்புறுதற்குக் காரணமாவன செவிகளாகும்.
(குறிப்பு) சூன்று:
சூல் என்னும் பகுதியடியாகப் பிறந்த வினையெச்சம். சூலல்-தோண்டுதல்; ஈண்டு ஆராய்தல்.
''நுங்கு சூன்றிட்டன்ன'' நாலடி. காமுறூஉம்: இன்னிசை யளபெடை.
(199) |
|
|
|
|
|
200. கடவுட் காட்சிகளைக்
கண்டனவே கண்களாம் |
- பொருளெனப் போழ்ந்தகன்று பொன்மணிபோன்
றெங்கும்
இருளறக் காண்பனகண் ணல்ல--மருளறப் பொய்க்காட்சி நீக்கிப்
பொருவறு முக்குடையான் நற்காட்சி காண்பன கண்.
(பதவுரை) பொருள் எனப்
போழ்ந்தகன்று-பொருள் என்று சொன்னவளவில் மிகத் திறந்து, பொன்
மணி போன்று-அழகிய நீலமணிபோல, எங்கும் இருளறக் காண்பன கண்
அல்ல -எல்லாப் பக்கங்களிலும் இருள் நீங்கக் காண்பன கண்களாகா,
மருள் அற-காம வெகுளி மயக்கங்கள் நீங்குமாறு,
பொய்க்காட்சிநீக்கி-பொய்யான காட்சிகளை அறவே ஒழித்து,
பொரு அறு முக்குடையான்-ஒப்பற்ற மூன்று குடைகளையுடைய அருகனது,
நற்காட்சி காண்பன கண்-நிலைபெற்ற திருவுருவைக் காண்பனவே
கண்களாகும்.
(குறிப்பு)
பொரு-ஒப்பு. முக்குடை: சந்திராதித்தியம், நித்திய விநோதம், சகலபாசனம்.
''முச்சக நிழற்று முழுமதி முக்குடை, அச்சுதன் அடிதொழ தறைகுவன் சொல்லே,'' பவணந்தி.
(200) |
|
|
|
|
|