(ப-ரை.) ஒரு குடியை - ஒரு குடும்பத்தை, கூறு ஆக்கி - பிரிவுபடுத்தி, கெடுக்கவேண்டாம் - கெடுக்காதே. பூ தேடி - பூவைத் தேடி, கொண்டைமேல்- கொண்டையின் மீது, முடிக்க வேண்டாம் - முடித்துக் கொள்ளாதே. தூறு ஆக்கி - (பிறர்மீது) பழிச்சொற்களை யுண்டாக்கி, தலையிட்டு - தலைப்பட்டுக்கொண்டு, திரியவேண்டாம் - அலையாதே. துர்ச்சனாய் - தீயவர்களாகி, திரிவாரோடு - (ஊர்தொறும்) அலைவருடன், இணங்கவேண்டாம் - சேராதே. வீறு ஆன - பெருமையுடையனவாகிய, தெய்வத்தை - தெய்வங்களை இகழவேண்டாம் - இகழாதே. வெற்றி உள்ள - மேன்மையுடைய, பெரியோரை - பெரியோர்களை, வெறுக்கவேண்டாம் - வெறுக்காதே. மாறு ஆன - (மற்ற நிலத்தில் உள்ளாருடன்) பகைமையுடையராகிய, குறவர் உடை - குறவர்களுடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன்-பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின்மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே-மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக. (பொ-ரை.) ஒரு குடியின்கண் ஒற்றுமையுடன் வாழ்பவர்களைப் பிரிவு செய்தல் கூடாது. கூறு - பிளவு; பிரிவு. குடி: குடியிலுள்ளார்க்கு ஆகுபெயர். கொண்டைமேல் பூ முடித்தல்கூடாது. பிறர் காணும்படி கொண்டைமேற் பூ முடித்துக்கொண்டு தூர்த்தர்போலத் திரியலாகாது என்க. மலர் பறித்துக் கடவுளுக்குச் சாத்தவேண்டும் என்னுங் கருத்துங் கொள்க. பிறர்மேல் பழிச்சொற்களைக் கட்டிவிட்டு, அதுவே தொழிலாகத் திரிதல் கூடாது. தலையிடல் - தொடர்பு வைத்துக் கொள்ளுதல்; பொறுப்பேற்றல். தீத்தொழில் உடையாருடன் சேர்தல் கூடாது. துர்ச்சனர் - துட்டர், தீயோர். பெருமையுள்ள தெய்வங்களை இகழ்ந்துரைத்தல் கூடாது. கூறு - பெருமை, வெற்றியுமாம். "தெய்வ மிகழேல்"என்பது ஆத்திசூடி. பெரியோரை வெறுத்தல் கூடாது. வெற்றி - பிறரினும் மேம்படுதல்; வாழவும் கெடவும் ஆற்றலுடைமையுமாம். வெறுத்தல்- இகழ்தல். மாறு - பகை : மாறுபட்ட நடையுமாம்; முருகக்கடவுளின் பெருமைக்கு மாறான என உரைப்பினும் அமையும். (12) |