(ப-ரை.) சேராத இடந்தனில் - சேரத்தகாத இடங்களில், சேரவேண்டாம் - சேராதே. செய்தநன்றி - ஒருவன் செய்த உதவியை, ஒருநாளும் - ஒருபொழுதும் மறக்க வேண்டாம் - மறக்காதே. ஊரோடும் - ஊர்தோறும் ஓடுகின்ற, குண்டுணியாய் - கோட் சொல்பவனாகி, திரிய வேண்டாம் - அலையாதே. உற்றாரை - உறவினரிடத்து, உதாசினங்கள் - இகழ்ச்சியுரைகள், சொல்ல வேண்டாம் - சொல்லாதே. பேர்ஆன - புகழ் அடைதற்குக் காரணமாகிய, காரியத்தை - காரியத்தை, தவிர்க்க வேண்டாம்- (செய்யாது) விலக்க வேண்டாம். பிணைபட்டு - (ஒருவனுக்குப்) பிணையாகி, துணைபோகி - துணையாகச் சென்று, திரியவேண்டாம்-அலையாதே. வார்ஆரும் - பெருமை நிறைந்த, குறவர்உடை - குறவர்களுடைய (மகளாகிய), வள்ளி - வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் - பக்கத்தில் உடையவனாகிய, மயில் ஏறும் பெருமாளை - மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக் கடவுளை, நெஞ்சே - மனமே, வாழ்த்தாய் - வாழ்த்துவாயாக. (பொ-ரை.) சேர்தற்குத் தகுதியில்லாதவருடன் சேர்தல் கூடாது. தகாதவர் - கள்ளுண்போர், தூர்த்தர் முதலாயினார், தன்: சாரியை. ஒருவர் செய்யும் உபகாரத்தை எப்பொழுதும் மறத்தல் கூடாது. நன்றி மறப்பது தீராக் குற்றமாகும்; "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு" என்பது திருக்குறள். "நன்றி மறவேல்" என்றார் ஒளவையாரும். ஊர்தோறும் சென்று புறங்கூறுதல் கூடாது. ஓடும் என்னும் பெயரெச்சம் குண்டுணி என்னும் பெயருடன் முடிந்தது. குண்டுணி-கோட் சொல்வோன் என்னும் பொருளில் வழங்குகிறது. ஊரோடும் என்பதற்கு ஊரிலுள்ள தீயவர்களுடன் சேர்ந்து என்று பொருளுரைத்தலும் ஆம். உறவின் முறையாரை மதியாது இகழ்தல் கூடாது. புகழைத் தருதற்குரிய வினையைச் செய்யாதிருத்தல் கூடாது. பேர், பெயர் என்பதன் மரூஉ ; பெயர் - புகழ். ஒருவனுக்குப் பிணையாகித் திரிந்துகொண்டிருத்தல் கூடாது. கடன் வாங்குவோர்க்கும் குற்றஞ் செய்வோர்க்கும் பிணையாதல் துன்பத்தை யுண்டாக்கும். பிணை - புணை ; ஈடு - ஜாமீன். வார் - விலங்கு, பறவை முதலிய பிடித்தற்குரிய வலையும் ஆம். (8) |