21. கற்றபடி ஒழுகல்

கற்றுப் பிறர்க்குரைத்துத் தாம்நில்லார் வாய்ப்படூஉம்
வெற்றுரைக் குண்டோர் வலியுடைமை - சொற்றநீர்
நில்லாததென்னென்று நாணுறைப்ப நேர்ந்தொருவன்
சொல்லாமே சூழ்ந்து சொலல்

(பொ-ள்.) கற்றுப் பிறர்க்கு உரைத்துத் தாம் நில்லார் வாய்ப்படூஉம் வெற்று உரைக்கு ஓர் வலி உடைமைஉண்டு - நூல்களைப் படித்துப் படித்ததன்படி ஒழுகவேண்டுமென்று அக்கருத்துக்களைப் பிறர்க்குமட்டும்எடுத்துக் கூறிக் கூறியபடி தாங்கள் அவ்வொழுக்கத்தில் நில்லாமலிருக்கின்றவர்கள் வாயில் உண்டாகும்சொல்லுக்கு ஒரு வலியுடைமை இருப்பதுண்டு; (அது), சொற்ற நீர் நில்லாதது என் என்று நாண்உறைப்ப நேர்ந்து ஒருவன் சொல்லாமே சூழ்ந்து சொலல் - நாங்கள் கற்றதன்படி ஒழுகவேண்டுமென்றுசொல்லிய நீங்கள் அங்ஙனமே அவ்வொழுக்கத்தில் நில்லாதது ஏனோ என்று வெட்கம் உறைக்கும்படிஎதிர்த்தொருவன் இகழ்ந்து சொல்லாதபடி, அறிவுறுத்தும்போது பிறர்க்கு நினைத்துப் பார்த்துஅறிவுறுத்தலாம்.

(வி-ம்.) சூழ்ந்து சொல்லல்ஒரு வலியுடைமையென்க. சூழ்ந்து சொல்லலாவது நீங்கள் அவ்வாறு நடத்தல் வேண்டுமென்றுஎதிரிருப்பாரை மட்டுஞ் சுட்டிச்சொல்லாமல் தன்னையும் அவர்களோடு சேர்த்துக்கொண்டு நாமெல்லாம்அவ்வாறு நடத்தல் வேண்டுமென்று தன்மைப் பன்மையாற் கூறுதல் போல்வன. இங்ஙனம் கூறுதலுமுண்டென்று அப்படிற்றொழுக்கத்தை இழித்தபடியாம். உறைத்தல் என்பது வருந்தும்படி நன்றாகத்தாக்குதல், “உறைப் பின் வீழ் ஒதுங்கு இடம் இன்மையின்”* என்பது கந்தபுராணம். ‘நான்சொல்வது உன் உடம்பில் உறைக்கவில்லையா’ என்பது வழக்கு,

(க-து.) ‘கற்றபின் நிற்கஅதற்குத் தக’ என்பது. (21)
__________________________________

*    கந்தபுராணம், நகரழி படலம், 60.